புஸ்ஸி ஆனந்த் - நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன் கிடையாது.. ஹைகோர்ட்டில் மனு தள்ளுபடி! இன்றே கைது?
மதுரை: கரூரில் தவெக தலைவர் விஜய் நடத்திய பிரசாரத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியாகியது தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இருவரும் தலைமறைவாகி உள்ளதோடு முன்ஜாமீன் கேட்டு மனு செய்தனர். இந்த மனுக்களை இன்று விசாரித்த மதுரை உயர்நீதிமன்ற கிளை இருவரின் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்து முன்ஜாமீன் (Bussy Anand bail) மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதனால் இருவரும் கைதாக வாய்ப்புள்ளது.
கரூர் வேலுசாமிபுரத்தில் கடந்த சனிக்கிழமை தவெக தலைவரும், நடிகருமான விஜய் பிரசாரம் மேற்கொண்டார். அப்போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் பலியாகினர். பலர் காயமடைந்தனர். தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் இந்த சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் தொடர்பாக தவெக பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் மதியழகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார் உள்ளிட்டவர்கள் தலைமறைவாகி உள்ளனர். இவர்களை கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இதற்கிடையே தான் இருவரும் போலீசாரின் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்கும் வகையில் முன்ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு மீது இன்று விசாரணை தொடங்கி நடந்து வந்தது. புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், ‛‛காவல்துறை பதிவு செய்த எப்ஐஆரில் தவறான தகவல் உள்ளது. மக்கள் கூடிய பிறகு தடியடி நடத்தினர். கரூர் சம்பவம் திட்டமிட்ட செயல் அல்ல. எங்கள் தொண்டர்களை கொல்ல வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை.
குண்டர்கள் அப்பாவி மக்களை ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர். சில குண்டர்கள் விஜய் மீது செருப்பை வீசி எறிந்தனர். திடீரென தடியடி நடத்தப்பட்டது. இது கூட்டத்தில் கொந்தளிப்பை உண்டாக்கியது. இந்த தடியடி ஏன் நடத்தப்பட்டது என சந்தேகம் வருகிறது. அதிக மக்கள் வருவார்கள் என காவல் துறை கணித்திருக்க வேண்டும். கூட்டம் கூடுவதை கணிப்பதில் நாங்கள் புலமை பெற்றவர்கள் இல்லை. காலியான ஆம்புலன்ஸ் கூட்டத்துக்குள் கொண்டு வரப்பட்டது. விபத்துகளை விபத்துகளாக தான் பார்க்க வேண்டும்.
எங்களுக்கு குறுகிய இடம் வழங்கப்பட்டது. இதுதொடர்பாக பிரசாரத்துக்கு ஒருநாள் முன்பாக முறையிட வந்தோம். ஆனால் நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் எங்களால் முறையிட முடியவில்லை. இதனால் வேலுச்சாமிபுரத்தில் நிகழ்ச்சி நடத்த வேண்டிய சூழல் வந்துவிட்டது. கைது செய்யப்பட்டால் பாதுகாப்பு கூட எங்களுக்கு கிடைக்காது'' என்றார்.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ‛‛இவ்வளவு சொல்கிறார்களே.. இதற்கு ஒரு ஆதாரத்தையாவது காட்ட வேண்டும் அல்லவா. இந்த வழக்கில் தலைமறைவாக இருப்பது ஏற்கத்தக்கது இல்ல. விசாரணை செய்தால் மட்டுமே உண்மை தெரியவரும். தற்போது விசாரணை தொடக்க நிலையில் உள்ளது. முன்ஜாமீன் வழங்கினால் விசாரணை செய்வது கடினம். இவர்களின் பொறுப்பற்ற தன்மையால் 41 பேர் பலியாகி உள்ளனர். இதனால் முன்ஜாமீன் வழங்க கூடாது'' என்று வாதிட்டனர்.
இதனை கேட்ட நீதிமன்றம் வழக்கின் உத்தரவை மாலைக்கு ஒத்திவைத்தார். இதனால் இன்று புஸ்ஸி ஆனந்த் மற்றும் நிர்மல் குமாருக்கு முன்ஜாமீன் வழங்கப்படுமா? இல்லையா? என்பது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் தான் இன்று மாலை 6 மணிக்கு இருவருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது என்று கூறி அவர்களின் மனுக்களை உயர்நீதிமன்ற நீதிபதி ஜோதி ராமன் அதிரடியாக உத்தரவிட்டார். இதனால் இருவரும் கைதாக வாய்ப்புள்ளது.












Click it and Unblock the Notifications