3 மாதமாக முதியோர் உதவி தொகை நிறுத்தம்.. மனம் நொறுங்கி அழுத மூதாட்டி.. ஆன்ஸ்பாட்டில் ஆக்சன்
மதுரை: மதுரையில் செல்போன் எண் பிரச்சனை காரணமாக 3 மாதமாக 85 வயது மூதாட்டிக்கு முதியோர் உதவித்தொகை 3 மாதங்களாக நிறுத்தப்பட்டிருந்தது. இதுபற்றி மாவட்ட ஆட்சியரிடம் கண்ணீர் மல்க மூதாட்டி புகார் அளித்த நிலையில், உதவித்தொகை கிடைக்க மதுரை மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகர் உடனடியாக நடவடிக்கை எடுத்தார்.
தமிழகத்தில் 60 வயதை கடந்து யாருடைய ஆதரவும் இன்றி வாழும் மக்களுக்கு முதியோர் உதவி தொகை வழங்கப்படுகிறது. இதேபோல் ஊனமுற்றோர் மற்றும் விதவையருக்கும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. மாதம் ஆயிரம் ரூபாய் உதவி தொகை வழங்கப்படுகிறது.

இந்நிலையில் முதியோர் உதவி தொகை பெற்று வந்த மூதாட்டி ஒருவருக்கு திடீரென மூன்று மாதங்களாக உதவி தொகை நிறுத்தப்பட்டது. என்ன காரணம் என்று தெரியாமல் தவித்த அவருக்கு மதுரை மாவட்ட ஆட்சியர் உடனடியாக முதியோர் உதவி தொகை கிடைக்க நடவடிக்கை எடுத்தார்.
மதுரை மாவட்டம் கீரைத் துறை பகுதியைச் சேர்ந்தவர் சுருளியம்மாளுக்கு 85 வயதான இவர், முதியோர் உதவித்தொகையில் தான் தனது தேவைகளை பூர்த்தி செய்து வருகிறார். இந்நிலையில், கடந்த 3 மாதங்களாக மூதாட்டிக்கு உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.
இதனால் பாதிக்கப்பட்ட மூதாட்டி, கண்ணீருடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்திருந்தார். அங்கிருந்தவர்கள் உதவியுடன், தனது பிரச்சனையை மனுவில் எழுதி மாவட்ட ஆட்சியர் அனி்ஸ் சேகரிடம் மூதாட்டி மனு அளித்தார்.

இதையடுத்து, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை உடனே அழைத்து விசாரணை மேற்கொண்டதில், மூதாட்டியின் தொடர்பு எண் முறையாக இல்லாததால் உதவித்தொகை நிறுத்தி வைக்கப்பட்டதாக தெரிவித்தனர். பின்னர், மாவட்ட ஆட்சியர் அனிஸ் சேகரின் உத்தரவின் பேரில், மூதாட்டிக்கு உதவித்தொகை ரொக்கமாக வழங்கப்பட்டது.












Click it and Unblock the Notifications