மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரத்தில் மின்னல் தாக்கி சேதம்!
மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் மின்னல் தாக்கியதில் சேதம் ஏற்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டது.
மதுரையில் நேற்று காலை முதல் வெயில் குறைவாக இருந்ததுடன் குளிர்ந்த காற்றும் வீசியது. பல்வேறு பகுதிகளில் லேசான மழையும் பெய்தது. மீண்டும் மாலை நேரத்திலும் சாரல் மழை பெய்தது. ஆனால் இரவு 9 மணியளவில் இடி-மின்னலுடன் பலத்த மழை பெய்தது. அப்போது மின்னல் தாக்கியதில் மீனாட்சி அம்மன் கோவில் கிழக்கு கோபுரத்தில் சேதம் ஏற்பட்டது.

மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள 4 ராஜ கோபுரங்களில் கிழக்கு கோபுரம் மிகவும் பழமையானது. மாரவர்மன் சுந்தரபாண்டியன் என்ற அரசனால் கடந்த 1216-1238 ஆண்டுக்குள் இந்த கோபுரம் கட்டப்பட்டதாக நம்பப்படுகிறது.
இந்த கிழக்கு ராஜகோபுரத்தின் உச்சியில் இருந்த வடக்கு நாசி தலத்தின் ஒரு பகுதியை மின்னல் தாக்கியது. இதனால் அதன் ஒரு பகுதி மட்டும் கீழே விழுந்தது.
தகவலறிந்த கோவில் இணை கமிஷனர் ஜெயராமன் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஆய்வு செய்தனர். கிழக்கு கோபுரம் உள்பட அனைத்து கோபுரங்களிலும் இடிதாங்கி பொருத்தப்பட்டு இருந்ததால் பெருத்த சேதம் தவிர்க்கப்பட்டது.












Click it and Unblock the Notifications