கொரோனா தடுப்பூசிக்கு பல கோடி செலவு..பொதுத்துறை நிறுவனங்களின் கதி என்ன? ஹைகோர்ட் கிடுக்கிப்பிடி
தனியார் நிறுவனங்களிடம் கொரோனா தடுப்பூசி வாங்கும்போது தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களைப் பயன்பாட்டுக்கு கொண்டுவராதது ஏன்? என்று சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மத்திய அரசிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
மதுரை: மத்திய அரசு தனியார் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்பூசி வாங்கும் போது, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை புதுப்பித்து தடுப்பூசி தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மத்திய அரசு மே 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவி வருவதால் ஆக்சிஜன் தட்டுப்பாடு நிலவுகிறது. கொரோனா தடுப்பூசியும் அதிக விலை கொடுத்து வாங்குகிறது மத்திய அரசு. பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறது. இந்த நிலையில்,
திருச்சி பெல் நிறுவனத்தில் 2003 முதல் மூடப்பட்ட ஆக்சிஜன் பிளான்ட்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டுவரவும், செங்கல்பட்டு திருக்கழுகுன்றத்தில் 2012ஆம் ஆண்டில் திறக்கப்பட்ட மத்திய அரசின் எச்எல்எல் நிறுவனத்தில் கொரோனா தடுப்பூசி உற்பத்தி செய்ய உத்தரவிடக் கோரியும் மதுரையைச் சேர்ந்த வெரோணிகா மேரி என்பவர் உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தார்.
இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், பி.புகழேந்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் ஆர்.அழகுமணி வாதிடுகையில், செங்கல்பட்டில் ஆண்டுக்கு 584 மில்லியன் டோஸ் தடுப்பூசி தயாரிக்கும் ஒருங்கிணைந்த தடுப்பூசி வளாகம் 2012ல் தொடங்கப்பட்டது. இந்த வளாகம் 9 ஆண்டுகளாக செயல்பாட்டுக்கு வரவில்லை என்று தெரிவித்தார்.
திருச்சி பெல் நிறுவன ஆக்சிஜன் உற்பத்தி நிலையங்களில் ஒரு மணி நேரத்துக்கு 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் தயாரிக்கலாம். இந்த பிளான்ட்களில் சில பராமரிப்பு பணிகள் மேற்கொண்டால் 15 முதல் 20 நாளில் மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியும் என்று வாதிட்டார்.
இதையடுத்து நீதிபதிகள் தங்கள் உத்தரவில், கொரோனாவுக்கு முன்பு வரை இந்தியா தடுப்பூசி தயாரிப்பில் முன்னோடியாக திகழ்ந்தது. உலகளவில் தடுப்பூசி ஏற்றுமதி செய்வதில் முன்னணியில் இருந்தது. தற்போது இந்தியாவில் இரு தனியார் நிறுவனங்கள் மட்டுமே கொரோனா தடுப்பூசிகளை தயாரித்து வருகிறது.
தடுப்பூசிக்கு மிக குறைந்த வரி..முழு விலக்கு அளித்தால் விலை உயரும் அபாயம்..நிர்மலா சீதாராமன் விளக்கம்
இந்தியாவில் தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் தடுப்பூசிகளை தயாரிக்கும் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்கள் உள்ளன. இதில் தமிழகம், மும்பை, இமாச்சல பிரதேசத்தில் செயல்பட்டு வந்த தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதன் உண்மை தன்மை என்வென்று தெரியவில்லை என்று கேள்வி தெரிவித்தனர்.
அதே நேரத்தில் பாரத் பயோடெக் நிறுவனத்திடம் கோவாக்சின், சீரம் நிறுவனத்திடம் கோவிஷீல்டு தடுப்பூசிகளை அரசுகள் வாங்கி வருகின்றன. இவ்விரண்டு நிறுவனமும் தனியார் நிறுவனங்கள். தடுப்பூசி தயாரிக்கும் அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களை ஏன் பயன்படுத்தவில்லை.
கோவிஷீல்டு தடுப்பூசி மத்திய அரசுக்கு ரூ.150க்கும், மாநில அரசுக்கு ரூ.300க்கும், கோவாக்சின் தடுப்பூசி மத்திய அரசுக்கு 150, மாநில அரசுக்கு ரூ.600க்கும் விற்கப்படுகிறது.
இந்தியாவின் மக்கள் தொகை 136 கோடியாகும். இவர்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய் செலவிட வேண்டியது வரும். தனியார் நிறுவனங்களிடம் தடுப்பூசி வாங்கும் அரசுகளின் முடிவை நீதிமன்றம் குறை கூறவில்லை. அரசுக்கு சொந்தமான தடுப்பூசி தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனங்களில் தடுப்பூசி தயாரித்தால் தடுப்பூசிக்காக தனியார் நிறுவனங்களிடம் பேரம் பேச வேண்டிய நிலை ஏற்படாது என்ற வேதனை தான் என்று தெரிவித்தனர்.
திருச்சி பெல் நிறுவனத்தில் ஒரு மணி நேரத்தில் 140 மெட்ரிக் கியூப் ஆக்சிஜன் தயாரிக்கும் வசதி உள்ளதா? இங்கு ஆக்சிஜன் தயாரிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராஜ்யசபா உறுப்பினர் அனுப்பிய கடிதத்தின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினர்.
அவசர காலத்தை கருத்தில் கொண்டு ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிக்க மத்திய அரசு உதவி செய்த நிலையில், திருச்சி பெல் நிறுவனத்தில் ஆக்சிஜன் உற்பத்தி செய்ய மத்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது? என்றும் கேள்வி எழுப்பினர்.
இந்தியாவில் எத்தனை தடுப்பூசி உற்பத்தி மையங்கள் உள்ளன? அவற்றின் உற்பத்தி திறன்? தற்போதைய நிலை என்ன? செங்கல்பட்டு தடுப்பூசி வளாகத்தின் உற்பத்தி திறன்? அதன் தற்போதைய நிலை என்ன? என்றும் சராமாரியாக கேள்வி எழுப்பினர்
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) நிதியுதவியுடன் மத்திய அரசுக்கு சொந்தமான பொதுத்துறை நிறுவனங்களுக்கு பதிலாக பாரத் பயோடெக் நிறுவனத்தில் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி செய்வது ஏன்? என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.
மத்திய அரசு கடந்த 5 ஆண்டுகளாக கொரோனா தடுப்பூசி உட்பட பிற தடுப்பூசிகளுக்காக எவ்வளவு நிதி ஒதுக்கீடு செய்தது? தனியார் நிறுவனங்களிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் செலவில் தடுப்பூசி வாங்கும் போது, அரசுக்கு சொந்தமான தடுப்பூசி மையங்களை புதுப்பித்து தடுப்பூசி தயாரிக்க எடுத்த நடவடிக்கை என்ன? என்பன உள்ளிட்ட அனைத்து கேள்விகளுக்கும் மத்திய அரசு மே 19ஆம் தேதிக்குள் பதிலளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்ட நீதிபதிகள் விசாரணையை தள்ளி வைத்தனர்.