நியாயமற்ற இடமாற்றம் அரசு ஊழியர்களுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கு.. உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு
மதுரை: தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நீலநாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். சம்பள குளறுபடி புகார் கூறியதால், என்னை பழிவாங்கும் வகையில் சில ஆசிரியர்கள் என் மீது பொய் புகார் அளித்தனர். அதன்பேரில் என்னை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாற்றம் செய்துள்ளார்கள் என்றார். இந்த வழக்கில் கருத்து தெரிவித்த உயர்நீதிமன்றம் நியாயமற்ற இடமாற்றம் அரசு ஊழியர்களுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கை விளைவிக்கும் என கூறியது.
தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த நீலநாராயணன் என்பவர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தனது பணியிட மாற்றத்துக்கு எதிராக வழக்கு தொடர்ந்தார். அவர் தாக்கல் செய்த மனுவில் கூறுகையில், கன்னியாகுமரி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக நான் பணியில் சேர்ந்தேன். பின்னர் சூப்பிரண்டாக பதவி உயர்வு பெற்று தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் பணியாற்றினேன்.

சாத்தான்குளத்தில் ஆசிரியர்களுக்கு சம்பளம் நிர்ணயித்ததில் குளறுபடி ஏற்பட்டது பற்றி தூத்துக்குடி மாவட்ட கல்வித்துறையின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தேன். அதன்படி உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதனால் என்னை பழிவாங்கும் வகையில் சில ஆசிரியர்கள் என் மீது பொய் புகார் அளித்தனர். அதன்பேரில் என்னை திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டைக்கு இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் உத்தரவிட்டார். இந்த உத்தரவை ரத்து செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி கூறுகையில், மனுதாரர் மீதான குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இல்லை என பள்ளிக்கல்வித்துறையின் இணை இயக்குனர் இங்கு பதில் மனு தாக்கல் செய்திருக்கிறார். அப்படி இருக்கும்போது யாரை திருப்திப்படுத்த மனுதாரரை பணியிட மாற்றம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்பதை புரிந்து கொள்ள இயலவில்லை.
நியாயமற்ற இடமாற்றங்கள் ஊழியர்களுக்கு ஈடுசெய்ய முடியாத தீங்கை விளைவிக்கும். நிர்வாக காரணங்களுக்காக என்ற போர்வையில் நியாயமற்ற இடமாற்றம், அவர்களின் குழந்தைகளின் கல்வியை பாதிக்கும். ஆகவே இடமாற்றங்களுக்கான முடிவுகளை எடுக்கும் திறமையான அதிகாரிகள் இந்த அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும். மேலும் அவர்களின் முடிவுகள் நியாயமாகவும் இருக்க வேண்டும்.
ஒரு அரசு ஊழியருக்கு எதிராக ஊழல், உறவினர்களுக்கு சலுகை மற்றும் சுயநலம் ஆகியவை நிரூபிக்கப்பட்டால், இடமாற்ற அதிகாரத்தை எந்த தயக்கமும் இல்லாமல் பயன்படுத்தலாம். நிர்வாக காரணங்களுக்காக செய்யப்படும் இடமாற்றங்கள் சில ஊழியர்களை துன்புறுத்துவதற்கும், ஒருவருக்கு தேவையற்ற சலுகைகளை செய்வதற்கும் மட்டுமே பயன்படுத்தப்படுகிறது.
ஊழியர்கள் அல்லது அதிகாரிகள் சங்கங்களின் புகார்கள் அல்லது அவர்கள் நடத்தும் போராட்டங்களின் அடிப்படையை ஆராயாமல் அரசு அதிகாரிகளை இடமாற்றம் செய்யக்கூடாது என்று இந்த நீதிமன்றம் கருதுகிறது. இதுபோன்ற நடைமுறைகள் அனுமதிக்கப்பட்டால், எந்த அரசு ஊழியரும் நேர்மையாகவும், அர்ப்பணிப்புடனும் பணியாற்ற முடியாது. மேலே குறிப்பிடப்பட்ட காரணங்களுக்காக, மனுதாரரை இடமாற்றம் செய்து பள்ளிக்கல்வி இணை இயக்குனர் பிறப்பித்த உத்தரவு ரத்து செய்யப்படுகிறது" இவ்வாறு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி பட்டு தேவானந்த் உத்தரவில் கூறியுள்ளார்.












Click it and Unblock the Notifications