ஏன் உள்ள போனீங்க... மதுரை வட்டாட்சியர் சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை
Recommended Video
மதுரை: மதுரையில் வாக்குப்பதிவு ஆவணங்கள் அறைக்குள் நுழைந்த விவகாரத்தில் வட்டாட்சியர் சம்பூர்ணத்துடன் சென்ற 3 அதிகாரிகளுடம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சம்பூரணத்திடம் தேர்தல் அதிகாரி விசாரணை நடத்தினார்.
மதுரை மக்களவை தொகுதிக்கான பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மதுரை மருத்துவக்கல்லூரியில் வைக்கப் பட்டுள்ளது.
இதேபோல் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்களும் மருத்துவக் கல்லூரியில் உள்ள ஒரு அறையில் வைக்கப்பட்டுள்ளன.

போலீஸ் பாதுகாப்பு
இதனால் மதுரை மருத்துவக் கல்லூரியைச் சுற்றிலும் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டு 24 மணி நேரமும் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதுதவிர மத்திய ரிசர்வ் படை போலீசாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர்.

அதிகாரிகள் நுழைந்தனர்
இந்நிலையில் சட்டசபை தொகுதி வாரியாக பதிவான வாக்குகளின் விவரங்கள் வைக்கப்பட்டுள்ள அறைக்கு சீல் வைக்கப்படவில்லை. இந்த அறைக்குள் அனுமதி இன்றி, உதவி கலால் ஆணையரக கண்காணிப்பாளர் சம்பூரணம் ஆவண பதிவு எழுத்தர் சீனிவாசன், மதுரை மாநகராட்சி மண்டலம்-1 அலுவலகத்தில் பணிபுரியும் ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ், ஆகிய நான்கு பேரும் சென்று திரும்பி உள்ளனர்.

வேட்பாளர்கள் முற்றுகை
இவர்கள் வாக்கு எண்ணும் மையத்திற்குள் 2 மணி நேரம் இருந்ததாகவும், சில முக்கிய ஆவணங்களை எடுத்துச் சென்றதாகவும், புகார் எழுந்தது. இது தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாக்கு எண்ணும் மையத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசன், அமமுக வேட்பாளர் டேவிட் அண்ணாதுரை உள்ளிட்டோர் முற்றுகையிட்டனர்.

மாவட்ட ஆட்சியர்
இதையடுத்து இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் பெண் அதிகாரி, சம்பூரணம் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். தற்போது எழுத்தர் சீனிவாசன், ராஜ பிரகாஷ், சூரிய பிரகாஷ் ஆகிய 3 பேரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவினை மதுரை மாவட்ட ஆட்சியர் நடராஜன் பிறப்பித்துள்ளார்.

தேர்தல் அதிகாரி விசாரணை
இதனிடையே ஏன் அத்துமீறி வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே நுழைந்தீர்கள் என மதுரை மக்களை தொகுதி தேர்தல் நடத்துனர் பாலாஜி, வட்டாட்சியர் சம்பூரணத்தை நேரில் அழைத்து விசாரணை நடத்தினார். மேலும் வாக்கு ஆவணம் தொடர்பாக ஜெராக்ஸ் எடுத்தவரிடமும் விசாரணை நடந்தது.












Click it and Unblock the Notifications