எய்ம்ஸ் திறக்கப்படாது.. என்டிஏ கூட்டம் மதுரையில் நடக்காததற்கு காரணம் அதுதான்.. மாணிக்கம் தாகூர்!
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக திறக்கப்பட வாய்ப்பில்லை என்று மாணிக்கம் தாகூர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாகவே மதுரையில் நடத்த திட்டமிட்டிருந்த என்டிஏ பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டதாக கூறிய மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு கோரிக்கை தொடர்பாக பொதுவெளியில் பேசக் கூடாது என்று ராகுல் காந்தி அறிவுறுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
கடந்த 2 மாதங்களாக திமுக ஆட்சியில் பங்கு கொடுக்க வேண்டும் என்று காங்கிரஸ் கட்சியினர் குரல் கொடுத்து வந்தனர். குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் பிரவீன் சக்ரவர்த்தி, மாணிக்கம் தாகூர் இருவரும் எக்ஸ் தளத்தில் திமுகவை வம்புக்கு இழுத்து நேரடியாக மோதி வந்தனர். மாணிக்கம் தாகூர் ஒவ்வொரு நாளும் திமுக இம்முறை ஆட்சியில் பங்களிக்க வேண்டும் என்று பேசி வந்தார்.

ஆனால் கடந்த வாரம் காங்கிரஸ் கட்சியின் எம்பிக்கள், எம்எல்ஏ-க்கள், நிர்வாகிகள் அனைவருடனும் காங்கிரஸ் தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். இதன்பின் காங்கிரஸ் கட்சியினருக்கு இனி கூட்டணி தொடர்பாக யாரும் பொதுவெளியில் பேசக் கூடாது என்று உத்தரவிட்டு அனுப்பி வைத்தனர். இதனால் ராகுல் காந்தி திமுகவுடன் கூட்டணியில் இருக்கவே விரும்புவதாக கூறப்படுகிறது.
இதனால் மாணிக்கம் தாகூர் ஒரு வாரமாக அமைதியாக உள்ளார். இந்த நிலையில் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், 2019ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. இதுதொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டால், இன்னும் 2 மாதங்களாகும் என்கிறார்கள். இன்னும் 2 மாதத்தில் தேர்தல் நடத்தை விதிகள் நடைமுறைக்கு வந்துவிடும்.
அப்போது மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை திறக்கப்படாது. இதன் காரணமாகவே மதுரையில் இருந்து என்டிஏ பொதுக்கூட்டம் சென்னைக்கு மாற்றப்பட்டது. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் இருவர் மீது சிபிஐ விசாரணை இருக்கிறது. இதனை என்டிஏ என்று அழைப்பதை விடவும் சிபிஐ என்றே அழைக்கலாம். இந்த கூட்டணியில் இந்தி பேசும் முதலாளிகள் அதிகமிருக்கிறார்கள்.
பணத்தையும், அதிகாரிகளையும் நம்பியுள்ள கூட்டணியாக என்டிஏ கூட்டணி இருக்கிறது. கடந்த முறை 4 பாஜக எம்எல்ஏ-க்கள் உருவாகினார்கள். இம்முறை அவர்களும் தோற்கடிக்கப்பட வேண்டும். பாஜகவிற்கு எதிரான மனநிலை மக்களிடையே அதிகம் இருக்கிறது. சிறு, குறு தொழிலாளர்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.
ஜனவரி 17ஆம் தேதி காங்கிரஸ் தலைவர்களான கார்கே மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் எங்களிடம் கருத்துகளை கேட்டனர். அவர்கள் கேட்டுக் கொண்டது என்னவென்றால், காங்கிரஸ் கட்சியினர் யாரும் பொதுவெளியில் கூட்டணி பற்றி பேசக் கூடாது என்பதுதான். அதனால் உண்மையான எந்த காங்கிரஸ் கட்சியினரும் பொதுவெளியில் இதை பேசுவது சரியாக இருக்காது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications