தரமாக ரெடியாகும் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை.. திட்டமிட்டப்படி ஜனவரியில் திறக்கப்படுமா?
மதுரை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் முதற்கட்ட வளாகம் ஜனவரி மாதம் திறக்கப்பட உள்ள நிலையில், தற்போது கட்டுமான பணிகள் முடிவடையும் தருவாயில் இருக்கிறது. ஜனவரியில் முதலில் ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் இடமாற்றம் செய்யப்பட்ட பின், பிப்ரவரி மாதம் முதல் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கும் என்று தெரிய வந்துள்ளது.
2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ஆனால் அடிக்கல் நாட்டியதோடு மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படவே இல்லை. மத்திய அரசு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கான நிதி ஒதுக்க வேண்டும் என்று போராட வேண்டிய நிலை ஏற்பட்டது.

4 ஆண்டுகளுக்கும் மேலாக மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடங்கப்படாமல் இருந்த நிலையில், எதிர்க்கட்சிகள் செங்கலுடன் பிரச்சாரம் செய்ய தொடங்கினார்கள். ஒரு வழியாக சில ஆண்டுகளுக்கு முன் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் தொடங்கப்பட்ட நிலையில், மாணவர்கள் சேர்க்கை 5 ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கப்பட்டது.
மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியை தேர்வு செய்த மாணவர்கள், தற்காலிகமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் படித்து வருகின்றனர். இதனிடையே ஆகஸ்ட் மாதம் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் 3டி மாடல் வீடியோ வெளியிடப்பட்டது. அதில் மாணவர் விடுதி, குடியிருப்புகள், விளையாட்டு வசதிகள் மற்றும் 750 இருக்கைகள் கொண்ட கலையரங்கம் அமைக்கப்படுகின்றன.
அதுமட்டுமல்லாமல் ஹெலிகாப்டர் தரையிறங்குவதற்கான தளம், பிரம்மாண்ட கார் பார்க்கிங் வசதிகள், நுழைவு வாயில் ஆகியவை உருவாக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட பணிகள் 2026 ஜனவரியில் முடிவுக்கு வரும் என்றும், 2ஆம் கட்ட பணிகள் 2027 பிப்ரவரியில் முடிவடையும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்த நிலையில் தற்போது எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிகள் எந்த அளவிற்கு முடிவடைந்துள்ளன என்பது தொடர்பாக தெரிய வந்துள்ளது. ஜனவரியில் திட்டமிட்டபடி முதற்கட்ட மருத்துவமனை வளாகம் திறக்கப்படுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இந்த நிலையில், 222 ஏக்கர் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை வளாகம் ஜனவரியில் செயல்பாட்டுக்கு வரவுள்ளது.
டிசம்பர் மாதம் முடிவதற்குள் முதற்கட்ட கட்டிட வளாகம் கட்டட பணிகள் முடிவடையும். அதன்பின் முதற்கட்டமாக ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் பயின்று வரும் மாணவர்களை இங்கு மாற்றம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்படும். புதிய கட்டிடங்களுக்கான ஒப்புதல் விரைவில் மாநில அரசிடம் இருந்து பெற்றுவிடுவோம். ஏற்கனவே மாணவர் விடுதிகள், சர்வீஸ் வசதிகள் கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளது.
அதேபோல் பிப்ரவரி மாதம் முதல் வெளி நோயாளிகள் பிரிவு செயல்பட தொடங்கும் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் வெளி நோயாளிகள் முதற்கட்டமாக குறைந்த அளவிலேயே அனுமதிக்கப்படுவார்கள். அதேபோல் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தமாக 183 ஆசிரியர்கள் தேவையாக இருக்கும் நிலையில், தற்போது வரை 80 பேர் நியமனம் செய்யப்பட்டுள்ளதும் தெரிய வந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications