தற்காலிக ஆசிரியர் நியமனத்திற்கு இடைக்கால தடை.. உயர்நீதிமன்ற மதுரைக் கிளை அதிரடி! அரசுக்கும் கேள்வி
மதுரை: தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு இடைக்கால தடை விதித்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் ஏராளமான ஆசிரியர்கள் காலிப் பணியிடங்கள் இருக்கின்றன. மாணவர்கள் நலனை கருத்தில் கொண்டு 13 ஆயிரத்து 391 ஆசிரியர்களை தற்காலிக அடிப்படையில் நியமனம் செய்வதற்கு கடந்த வாரம் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இடைநிலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் முதுகலை ஆசிரியர்கள் என்று 3 வகையான ஆசிரியர்களை நியமனம் செய்யவும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.7,500, பட்டதாரி ஆசிரியர்களுக்கு ரூ.10 ஆயிரம், முதுகலை ஆசிரியர்களுக்கு ரூ.12 ஆயிரம் என்ற அடிப்படையில் இந்த பணிநியமனங்களை மேற்கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் கீழ் பணியாற்றும் தன்னார்வலர்கள், அதேபோன்று ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. இந்த பணிநியமனங்களை அந்தந்த பள்ளிகளில் இருக்கக்கூடிய பள்ளி நிர்வாகக் குழுவே மேற்கொள்ளலாம் என்றும் கூறப்பட்டது.
இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சங்கத்தின் தலைவர் ஷீலா உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஏராளமானோர் அப்போதிருந்த வெயிட்டேஜ் முறையால் பணிக்கு தேர்வாகவில்லை.
ஆனால் அவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் வெற்றி பெற்றவர்கள். தற்காலிக ஆசிரியர்கள் தேர்வு தொடர்பாக முறைப்படுத்தப்பட்ட வழிமுறைகள் எதுவும் இல்லை. அந்தந்த மாவட்ட கல்வி அலுவலர்கள் அவர்களுக்கு தேவையான நபர்களை பணியில் நியமித்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் தகுதியற்றவர்கள் தற்காலிக ஆசிரியர்களாக நியமிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், தமிழக அரசுத் தரப்பில் விளக்கம் பெற்று தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார். இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், நிரந்தரமாக ஆசிரியர்கள் நியமிப்பதில் அரசுக்கு என்ன பிரச்னை என்று கேள்வி எழுப்பியதோடு, தற்காலிக ஆசிரியர்கள் நியமனத்திற்கு தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.