ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனை தாக்கினால் பரிசு… மதுரைக்கார டாக்டரின் சர்ச்சை அறிவிப்பு
மதுரை: பாஜக மாநிலத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்திருக்கிறது என்றே கூறலாம். நாளொரு அறிக்கை பொழுதொறு பேட்டி என எப்போதும் பரபரப்பாக செயல்பட்டு வரும் அண்ணாமலை, அவ்வப்போது திமுக காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்தவர்களையும் வறுத்து எடுத்து வருகிறார்..
Recommended Video
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேசிய அவர் திமுகவையும் காங்கிரசையும் கடுமையாக விமர்சித்திருந்தார். இந்நிலையில் அதற்கு இவ்விரு கட்சிகளையும் சேர்ந்த மூத்த தலைவர்கள் தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட அக்கட்சியின் மூத்த தலைவரான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மிகக் கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார்.
நிகழ்ச்சியில் பேசிய அவர், பாஜக மாநில தலைவர் யார் என்றே தனக்கு தெரியாது எனவும், அண்ணாமலையோ, சின்னமலையோ, திருவாண்ணாமலையோ, எவ்வளவு பெரிய அயோக்கிய மனிதனாக இருந்தால் அண்ணாமலை இப்படி பேசுவார் என்று சிந்தித்து பாருங்கள் எனவும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஒரு புறம்போக்கு, இப்படி பேசுகிறார் ஒழிக்கப்படவேண்டிய குரல் அது என்றார்.
மேலும், பிரதமரை மோடி என்று அழைப்பதைவிட கேடி என்று சொல்லலாம் எனவும், முதல்வர் ஸ்டாலினை பார்த்து குரைப்பவர்களும் சூரியனை பார்த்து குரைப்பவர்களும் ஒன்று தான் எனக் கூறியிருந்தார்.
ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடும் கண்டனங்களை தெரிவித்துள்ள நிலையில், திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், பாஜகவில் சேர்ந்து 4 மணி நேரத்தில் தேர்தலில் போட்டியிட சீட் பெற்றவருமான மதுரை டாக்டர் சரவணன் மிகக் கடுமையான கண்டனங்களை இளங்கோவனுக்கு தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிரதமர் மோடியையும், பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலையையும் விமர்சித்த ஈவிகேஎஸ் இளங்கோவன் அரசியல் அகதி எனவும், காங்கிரஸ் கட்சி அவரை புறம்தள்ளி மறந்துவிட்டது, அவர் அரசியல் உள்ளார் என்பதை காண்பிப்பதற்காகவே கடுமையாக பேசியுள்ளதாகக் கூறினார்.
மேலும், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால்வைக்க முடியாது எனக் கூறிய டாக்டர் சரவணன், ஜெய்பீம் படத்தில் சூர்யாவுக்கு எதிராக சர்ச்சைகள் எழுந்தபோது, அவரை தாக்குப்பவருக்கு பணம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டதுபோல், ஈவிகேஎஸ் இளங்கோவன் மதுரையில் கால் வைத்தால் அவரை தாக்குபவர்களுக்கு பணம் வழங்கப்படும் என மதுரை பாஜக சார்பில் அறிவிக்கிறோம் என்றார்.