பிடிஆரை எதிர்க்கும் சுந்தர் சி-யின் மீது வழக்கு.. திமுக புகாரில் அதிரடி.. அனல் பறக்கும் மதுரை மத்திய தொகுதி
மதுரை: மதுரை மத்திய தொகுதியில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை, அதிமுக - பாஜக கூட்டணியில் இயக்குநர் சுந்தர் சி எதிர்த்து போட்டியிடுகிறார். இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. தேர்தல் பிரசாரத்தில் இருவரும் மாறி மாறி தாக்கி பேசி வருகின்றன. இந்நிலையில் தான் திமுகவினர் அளித்த புகாரின் அடிப்படையில் சுந்தர் சி மீது போலீசார் அதிரடியாக வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுரை மத்திய சட்டசபை தொகுதியில் திமுக சார்பில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் மீண்டும் போட்டியிடுகிறார். இவர் கடந்த 2016, 2021 சட்டசபை தேர்தலில் மதுரை மத்திய தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த முறை ஹாட்ரிக் வெற்றியை எதிர்நோக்கி பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் களமிறங்கி உள்ளார். இந்த தொகுதியில் அவரை எதிர்த்து அதிமுக - பாஜக கூட்டணியில் புதிய நீதிக்கட்சி சார்பில் இயக்குநரும், நடிகருமான சுந்தர் சி களமிறங்கி உள்ளார்.
சுந்தர் சி மீது புகார்
இவர்கள் 2 பேரும் தொகுதியில் தீவிர பிரசரம் மேற்கொண்டு வருகின்றனர். இருவரும் மாறி மாறி தாக்கி பேசி வருகின்றனர். இதற்கிடையே தான் சுந்தர் சி தேர்தல் நடத்தை விதியை மீறியதாக புகார் எழுந்துள்ளது. அதாவது மதுரை மத்திய தொகுதிக்குட்பட்ட எல்லீஸ் நகர் பகுதி சர்ச்சிற்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை சுந்தர் சி சென்றார். அதிமுக சின்னம் பொறித்த துண்டு அணிந்து அவர் அங்கு சென்று பிரார்த்தனை செய்தார்.
தேர்தல் நடத்தை விதிமீறல்
அதோடு பொதுமக்களிடம் ஆதரவு கோரினார். தான் போட்டியிடும் இரட்டை இலை சின்னத்துடன் வாக்கு சேகரித்தார். தேர்தல் நடத்தை விதிகளின்படி வழிபாட்டு தலங்களுக்குள் கட்சி சின்னத்துடன் சென்று ஆதரவு கேட்க தடை உள்ளது. ஆனால் அதனை சுந்தர் சி மீறியதாக திமுக சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications