அண்ணாமலை தொலைபேசி உரையாடல்.. எடிட் செய்யப்பட்டதாக குற்றச்சாட்டு.. மதுரை சைபர் கிரைமில் புகார்!
மதுரை: பாஜக தலைவர் அண்ணாமலையும், தானும் பேசிய ஆடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்கள் என மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக, மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
மதுரை விமான நிலைய பகுதியில் கடந்த 13ஆம் தேதியன்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது காலணி வீசி தாக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், சம்பவத்தன்று பாஜக தலைவர் அண்ணாமலை, மதுரை புறநகர் மாவட்ட தலைவர் சுசீந்திரனும் பேசியது போன்ற ஆடியோ ஒன்று சமூகவலைதளங்களில் வெளியாகியது.

இது தொடர்பாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசிய ஆடியோவை எடிட் செய்து வெளியிட்ட டாக்டர்.சரவணனிடம் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க கோரி, மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் இன்று மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களிடம் சுசீந்திரன் பேசியவதாவது: நிதியமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தின் பிண்ணனியில் திட்டமிட்ட சூழ்ச்சி உள்ளது. டாக்டர்.சரவணன் தனது மருத்துவமனையில் செய்த மோசடியில் தற்காத்துகொள்ள மாநில தலைவர் மீது அவதூறு பரப்புகிறார், சம்பவத்தன்று ராணுவ வீரரின் உடலுக்கு மரியாதை செலுத்த சென்றபோது நானும், அண்ணாமலையும் ஒரே காரிலயே பயணித்தோம், அப்போது டாக்டர்.சரவணன் போனில் தொடர்புகொண்டு பேசினார்.
அப்போது நாங்கள் இருவரும் பேசியவற்றை ஆடியோவாக பதிவுசெய்து சமூக வலைதளங்களில் எடிட் செய்து மாநில தலைவர் அண்ணாமலைக்கு எதிராக அவதூறு பரப்பும் நோக்கில் சரவணன் வெளியிட்டுள்ளார். நானும், அண்ணாமலையும் ஒரே காரில் இருந்துகொண்டு எப்படி அலைபேசியில் பேசமுடியும் என சுசீந்திரன் கேள்வி எழுப்பினார்.
அமைச்சர் கார் மீது காலணி வீசிய விவகாரத்தில், விமான நிலையத்திற்கு செல்லாத பாஜகவினரை கூட காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் கடுமையான அழைத்துசென்று மன உளைச்சலுக்கு ஆளாக்குகின்றனர். மதுரையில் நடைபெறும் திமுக அரசின் செயல்களை நாள்தோறும் மத்திய உளவுத்துறைக்கும், அமித்ஷாவிற்கும் அவ்வப்போது தகவல் அளித்து வருகிறோம். டாக்டர்.சரவணனின் பிண்ணனியில் திமுக அரசு இருந்துகொண்டு இதுபோன்ற அவதூறுகளை பரப்பி வருவதாக மதுரை மாநகர பாஜக தலைவர் சுசீந்திரன் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications