இதுதான் பிரம்மாண்டம்.. வேலம்மாள் கிரிக்கெட் மைதானத்தை திறந்து வைக்கும் தோனி.. மாறும் மதுரையின் முகம்
மதுரை: மதுரையில் வேலம்மாள் குழுமம் சார்பாக கட்டப்பட்டுள்ள பிரம்மாண்ட கிரிக்கெட் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி திறந்து வைக்க உள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்பட்டு வந்த நிலையில், 20 ஆயிரம் ரசிகர்கள் அமரும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
சென்னை, கோவை ஆகிய மாவட்டங்களை ஒப்பிடுகையில் தென் மாவட்டங்களின் வாயிலான கருதப்படும் மதுரையில் வளர்ச்சி மிகவும் குறைவு தான். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே மதுரையில் முதலீடுகள் குவிந்து வருகின்றன. ஏற்கனவே டைடல் பார்க் பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், இன்னொரு பக்கம் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான ஒரு வழியாக முடிவடையும் நிலைக்கு வந்துள்ளது.

இந்த நிலையில் 2023ஆம் ஆண்டு மதுரை சிந்தாமணி பகுதியில் வேலம்மாள் குழுமம் சார்பாக புதிய கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. மொத்தமாக 11.25 ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட்டுள்ளது. பயிற்சி ஆடுகளங்கள், இரு அணிகளின் வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், மருத்துவமனை வசதி உள்ளிட்டவையுடன் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 20 ஆயிரம் இருக்கைகள், 500 கார்களை நிறுத்தும் அளவிற்கான பார்க்கிங் வசதி ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் பெங்களூர் மைதானத்தை போல் மழை பெய்தாலும் விரைவாக மீண்டும் போட்டியை தொடங்கும் வகையில் சிறப்பான வடிகால் வசதி அமைக்கப்பட்டுள்ளது. இந்த மைதானத்தை சுற்றி 5 அடியளவில் மழைநீர் வெளியேறும் வகையில் கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது.
அதேபோல் ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளின் கிரிக்கெட் மைதான வல்லுநர்களுடன் ஆலோசித்து இந்த மைதானத்தின் ஒளி விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை 7,500 இருக்கைகள் போடப்பட்டுள்ளன. அதேபோல் மைதானத்தின் சுற்றுப்பகுதியை கண்காணிக்க 197 கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
சென்னை சேப்பாக்கம் மைதானத்திற்கு பின் தமிழ்நாட்டின் 2வது பெரிய ஸ்டேடியமாக இது அமைந்திருக்கிறது. ஏற்கனவே சென்னை மற்றும் கோவையில் டிஎன்பிஎல், புச்சிபாபு தொடர் போட்டிகள் நடந்து வருகின்றன. கடந்த மாதம் கூட கோவையில் உள்ள கல்லூரி மைதானத்தில் புச்சி பாபு தொடர் நடைபெற்றது. கடந்த ஆண்டு சூர்யகுமார் யாதவ், ஸ்ரேயாஸ் ஐயர் போன்றவர்கள் கோவைக்கு வந்து விளையாடினர்.
இனி மதுரையில் டிஎன்பிஎல், ரஞ்சி டிராபு, புச்சி பாபு கிரிக்கெட் தொடர் ஆகியவை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மதுரை விமான நிலையத்தில் இருந்து சுமார் 20 நிமிடங்களில் மைதானத்திற்கு வர முடியும். அதேபோல் வீரர்கள் தங்குவதற்கு அருகிலேயே பிரம்மாண்ட ஹோட்டலும் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் மைதானத்திற்கு வருவதற்கு கால தாமதம் ஏற்படவும் வாய்ப்புகள் குறைவுதான்.
இதனால் மதுரை விமானம் பலரின் விருப்பமாக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது. இதனை இன்று இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் தோனி திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அதிகளவில் ரசிகர்கள் அந்த பகுதியில் கூடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், டிஎன்பிஎல் வீரர்கள், டிஎன்சிஏ அதிகாரிகளும் வருவார்கள் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications