பிள்ளைகளை படிக்க வைப்பது காதலிக்க அல்ல.. வயதான பெற்றோரை தவிக்கவிடலாமா? மதுரை நீதிபதிகள் கருத்து!
மதுரை: காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல் ஏற்றமும், இறக்கமும் கொண்டது என்று உயர்நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார். காதலிக்கும் பிள்ளைகள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள், காதல் திருமணம் செய்து கொள்பவர் வயதான பெற்றோரை தவிக்க விடலாமா என்றும் கேள்வி எழுப்பி இருக்கின்றனர்.
திருச்சியைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் சென்னையில் உள்ள பிரபலமான மருத்துவமனைக்கு சொந்தமான மருந்தகத்தில் பணியாற்றி வந்துள்ளார். இவர் சென்னையில் இருந்து திருச்சிக்கு வந்த போது, திடீரென மாயமானதாக கூறப்படுகிறது. இதையடுத்து அச்சம் அடைந்த பெற்றோர், மகள் காணாமல் போனது தொடர்பான திருச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

அதுமட்டுமல்லாமல் காணாமல் போன மகளை மீட்டு ஆஜர்படுத்தக் கோரி அந்த பெண்ணின் தந்தை கருப்பண்ணன் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள், மாயமான பெண்ணை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உத்தரவிட்டு விசாரணையை ஒத்தி வைத்தனர்.
இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிபதிகள் வேல்முருகன், ஜோதிராமன் ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மாயமானதாக சொல்லப்பட்ட இளம்பெண் காணொலி வாயிலாக நீதிபதிகள் முன்னிலையில் ஆஜராகினார். அப்போது அந்த பெண், நான் உடன் பணிபுரிந்த மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து அவருடன் வாழ்ந்து வருகிறேன். என்னை யாரும் கடத்திச் செல்லவில்லை என்று தெரிவித்தார்.
இதன்பின் நீதிபதிகள், குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவே பெற்றோர் படிக்க வைக்கின்றனர். பிள்ளைகளை படிக்க வைப்பது காதலிக்க அல்ல.. காதலிக்கும் பிள்ளைகள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். காதல் திருமணம் என்பது பங்குச்சந்தை போல, ஏற்றமும் இறக்கமும் உண்டு. மனுதாரரின் மகள் விரும்பியவருடன் செல்வது தனிப்பட்ட விருப்பம்.
ஆனால் பெற்றோரின் உணர்வுகளுக்கும் மதிப்பளிக்க வேண்டும். பெண் நன்றாக படித்துள்ளார். பெற்றோருக்கு தகவல் கூறியிருக்க வேண்டும். உங்கள் பெற்றோர் உங்களை நீதிமன்றத்தில் இப்படி காணொளி வழியாக பார்க்க செய்வதா? காதலை எடுத்து சொல்லி சமாதானம் செய்ய முயற்சித்திருக்கலாம். பெற்றோரும் தற்போதைய காலகட்டத்தை அறிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தினர்.
தொடர்ந்து, இளம் பெண்ணிடம் கணவருடன் சென்று பெற்றோரை சமாதானம் செய்யுங்கள் என்றும் அட்வைஸ் செய்தார். பின்னர் பெற்றோர் தரப்பில், நாங்கள் வயதானவர்கள்.. எங்களை கவனித்துக் கொள்ள யாரும் இல்லை என்று கண்ணீர் சிந்தினர். அதற்கு நீதிபதிகள், உங்கள் மகள் உரிய வயதை எட்டிவிட்டார், அவர் திருமணமாகி கணவருடன் சென்றுவிட்டார். இந்த விஷயத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது என்று கூறி வழக்கை முடித்து வைத்தனர்.












Click it and Unblock the Notifications