மதுரை மேயர் விவகாரம்.. அதிமுக திட்டத்தை அறிந்த திமுக தலைமை.. பொங்கலுக்குள் முடியும் பஞ்சாயத்து!
மதுரை: பொங்கல் பண்டிகைக்குள் மதுரை மாநகராட்சிக்கான புதிய மேயரை நியமனம் செய்ய திமுக தீவிரம் காட்டி வருகிறது. மேயர் நியமனம் தொடர்பான பிரச்சனையை மக்களிடம் கொண்டு செல்ல அதிமுக தயாராகி வந்த சூழலில், திமுகவினரின் நடவடிக்கை மதுரை அதிமுக நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
மதுரை மாநகராட்சியில் ரூ.150 கோடி சொத்து வரி ஊழல் விவகாரத்தில் மேயர், 5 மண்டலத் தலைவர்கள், 2 நிலைக்குழுத் தலைவர்கள் பதவி விலக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டார். இந்த வழக்கின் விசாரணையும் நடைபெற்றது. அதன் உச்சமாக மேயர் இந்திராணி கணவர் பொன்வசந்த் கைது செய்யப்பட்டார். இதன்பின் அக்டோபர் 17ஆம் தேதி இந்திராணியும் மேயர் பதவியை ராஜினாமா செய்தார்.

இதன்பின் மதுரை மாநகராட்சியின் புதிய மேயர் யார் என்ற கேள்வி எழுந்தது. சுமார் 4 மாதங்களாக மேயர் யார் என்பதை அறிவிக்காமல் திமுக அமைதி காத்து வருகிறது. முதல்வர் ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மதுரை மாவட்டத்திற்கு ஏராளமான முறை வந்துவிட்ட போதும், மேயர் விவகாரத்தை கண்டுகொள்ளவே இல்லை.
இந்த நிலையில் சட்டசபைத் தேர்தலுக்கு முன்பாக மதுரை மேயர் நியமனம் செய்யப்படுவாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. ஆனால் சட்டசபைத் தேர்தல் வரை காலம் தாழ்த்தினால், அதிமுகவினர் அதையே பிரச்சாரமாக முன்னெடுப்பார்கள். ஏற்கனவே பொங்கல் பண்டிக்கைக்கு பின் மாநகராட்சி மேயர் விவகாரத்தை கையில் எடுத்து பேரணி நடத்த திட்டமிட்டு வந்தது.
இதனை உணர்ந்து கொண்ட திமுக உடனடியாக மேயர் நியமன விவகாரத்தை முடிவுக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இதனால் அமைச்சர்கள் மூர்த்தி மற்றும் பிடிஆர் இடையிலான சமாதான பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது. இறுதியாக மூர்த்தியின் ஆதரவாளர் ஒருவரை மேயராக கொண்டு வரும் திட்டத்திற்கு திமுக வந்துள்ளது.
இதனால் ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைக்க முதல்வர் ஸ்டாலின் வரும் போது, மேயர் நியமனம் தொடர்பான இறுதி முடிவு எடுக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகும் என்று திமுகவினர் கூறுகின்றனர். ஆனால் மண்டலத் தலைவர்கள் தொடர்பான அறிவிப்பு தேர்தலுக்கு பின்னரே வெளியாகும் என்றும் சொல்கின்றனர்.












Click it and Unblock the Notifications