8 மாதங்களில் எழுந்து நிற்கும் கலைஞர் நூலகம்.. 40 மாதங்களாக ஒற்றை செங்கல்லில் எய்ம்ஸ்: சு.வெங்கடேசன்
மதுரை: கலைஞர் நூலகத்தின் கட்டுமானப் பணியையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பலகையையும் ஒப்பிட்டு மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி மதுரை எம்.பி சு.வெங்கடேசன் விமர்சனம் செய்து இருக்கிறார்.
மதுரை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மதுரை கலைஞர் நூலகத்தின் கட்டுமானம் வேகமாக நடைபெற்று வருவதை பிரதிபலிக்கும் வகையில் புகைப்படம் வெளியிடப்பட்டது.

சு.வெங்கடேசன் ட்வீட்
இதனையும், மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை அமைய இருக்கும் இடத்தில் உள்ள போர்டையும் ட்விட்டரில் பகிர்ந்த எம்.பி. சு.வெங்கடேசன், "அறிவிக்கப்பட்ட 8 மாதங்களில் உயர்ந்து நிற்கும் மதுரையின் கலைஞர் நினைவு நூலகம்... அடிக்கல் நாட்டி 40 மாதங்களை கடந்தும் ஒற்றைச் செங்கலோடு நிற்கும் மதுரை எய்ம்ஸ்... இரண்டும் மதுரையின் சாட்சிகள்!" என்று பதிவிட்டு இருந்தார்.

பிரதமர் அடிக்கல்
மதுரை மாவட்டம் தோப்பூரில் கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் எய்ம்ஸ் மருத்துவமனைக்கான அடிக்கல்லை பிரதமர் நரேந்திர மோடி நாட்டினார். தோப்பூரில் 224.24 ஏக்கர் பரப்பளவில் உயர் மருத்துவ வசதிகள் கொண்ட இந்த மருத்துவமனை 750 ஏக்கர் படுக்கைகளுடன் அமைக்கப்படும் என்று கூறப்பட்டது.

3 ஆண்டுகளாக முடங்கி கிடக்கும் பணி
இதன் கட்டுமானப் பணிகள் 45 மாதங்களில் நிறைவடையும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகள் கடந்த பிறகும் சுற்றுச்சுவரை தவிர்த்து வேறு எந்த பணிகளும் நடக்கவில்லை என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டின. அதேநேரம் நடப்பாண்டிற்கான எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர் சேர்க்கை ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரியில் நடைபெற்றது.

தற்போதைய நிலை
மருத்துவமனைக்கான வரைபடம் தயாரிக்கும் பணி நிறைவடைந்துவிட்டதாக அண்மையில் தெரிவித்த மத்திய அரசு, ரூ.1,977 கோடி மொத்த நிதியில் ரூ.1,500 கோடி நிதி ஒதுக்கீடு ஏற்கனவே செய்யப்பட்டுவிட்டதாகவும் மீதம் உள்ள நிதி அக்டோபர் 26 ஆம் தேதிக்குள் ஒதுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது. கடந்த மே மாதம் இதற்கான திட்ட அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டது.

2028ல் எய்ம்ஸ் மருத்துவமனை
அதில், "2023 ஆம் ஆண்டு வரை, எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிடத்திற்கான வரைபடத்திற்கான அனுமதி மற்றும் சுற்றுச்சூழல் ஆணையத்தின் அனுமதி ஆகியவற்றை பெறும் பணிகள் நடைபெறும். 2026 ஆம் ஆண்டு வரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டிட பணிகள் நடைபெற்று 2028 ஆம் ஆண்டு முதல் மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் மருத்துவமனையில் முழுமையாக மக்களின் பயன்பாட்டுக்கு வரும்." என தெரிவிக்கப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications