150 ஆடுகள்- 350 கோழிகள்-10,000 பேருக்கு சுடச்சுட பிரியாணி.. வடக்கம்பட்டி முனியாண்டி கோயில் திருவிழா
மதுரை: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே நடைபெற்ற முனியாண்டி திருவிழாவில் பக்தர்களுக்கு சுடச்சுட பிரியாணி பிரசாதம் வழங்கப்பட்டது.
மதுரை மாவட்டம் வடக்கம்பட்டியை சேர்ந்தவர் சிலர் தமிழகம், ஆந்திரா, கர்நாடகம், புதுச்சேரி, சீனா, சிங்கப்பூர், மலேசியா ஆகிய இடங்களில் முனியாண்டி விலாஸ் என்ற பெயரில் அசைவ உணவகங்களை பல ஆண்டுகளாக வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர்.
இந்த ஹோட்டல் உரிமையாளர்களின் காவல் தெய்வமான முனியாண்டி கோயில் வடக்கம்பட்டியில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் தை மாதத்தில் முனியாண்டி கோயில் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

கோழிகள்
இந்த திருவிழாவை இரு சமூக மக்கள் செய்வர். 85ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் பக்தர்கள் ஒரு வாரத்திற்கு காப்பு கட்டி விரதம் மேற்கொள்வர். தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் முனியாண்டி ஓட்டல் நடத்தும் குடும்பத்தினர் ஒன்றாக இணைந்து 150 ஆடுகள், 300-க்கும் மேற்பட்ட கோழிகளை பலியிட்டு வணங்கினர்.

விருதுநகர்
இதையடுத்து பலியிட்ட ஆடு, கோழியை கொண்டு தயார் செய்யப்பட்ட பிரியாணி சுடச்சுட பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது. இந்த கோயில் திருவிழாவிற்காக பக்தர்கள் வெளிமாநிலங்களில் இருந்தாலும் மதுரையில் ஆஜராகிவிடுகின்றனர். குறிப்பாக மதுரை, விருதுநகர் மாவட்ட மக்கள் அதிகமாக கலந்து கொள்கின்றனர்.

சுடச் சுட பிரியாணி
10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு சுடச் சுட பிரியாணி வழங்கப்பட்டது. இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளர்கள் கூறுகையில் முதலில் காரைக்குடியில் தான் முனியாண்டி விலாஸ் ஹோட்டலை தொடங்கினோம். இப்படியே விருதுநகர், மதுரை உள்பட தமிழகம் முழுவதும் கிளைகள் தொடங்கப்பட்டது.

பிரியாணி படையல்
இந்த ஹோட்டல்களுக்கு வரும் முதல் வாடிக்கையாளர் வழங்கும் பணத்தை அப்படியே உண்டியலில் சேகரித்து ஒவ்வொரு ஆண்டும் முனியாண்டி சுவாமி பூஜைக்கு வழங்குவதை ஐதீகமாக கடைப்பிடிக்கிறோம். எவ்வளவு நெருக்கடி வந்தாலும் அந்தப் பணத்தை எடுக்க மாட்டோம். பசியோடு வருபவர்களுக்கு பணம் வாங்கி கொண்டு உணவு வழங்குவது பாவம். அந்த பாவத்துக்கு பிராயசித்தமாக வாடிக்கையாளர் கொடுக்கும் பணத்திலிருந்து முனியாண்டிக்கு பிரியாணி படைத்து வழிபடுகிறோம் என்றனர்.












Click it and Unblock the Notifications