மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளில் தயார் நிலையில் ஓமிக்ரான் வார்டுகள்
மதுரை: தமிழகத்தில் ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை. இருப்பினும் முன்னெச்சரிக்கையாக மதுரை, நெல்லை அரசு மருத்துவமனைகளில் ஓமிக்ரான் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனி வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளன.
Recommended Video
இந்தியாவில் 2 பேருக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் இருந்து உலக நாடுகளுக்கு ஓமிக்ரான் கொரோனா வைரஸ் பரவி வருகிறது.

தமிழகத்தில் பாதிப்பு இல்லை
டெல்டா எனப்படும் உருமாறிய கொரோனா வைரஸை விட அதிவேகமாக பரவக் கூடியது ஓமிக்ரான். 30 முறை உருமாறிய இந்த கொரோனா வைரஸ் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடியது என உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. தமிழகத்தில் ஓமிக்ரான் பாதிப்பு இதுவரை கண்டறியப்படவில்லை.

மதுரை அரசு மருத்துவமனை
இருப்பினும் ஓமிக்ரான் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டால் அதை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வெளிநாடுகளிலிருந்து மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு ஓமிக்ரான் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் ஓமிக்ரான் பாதிப்பு கண்டறியப்படுகிற நபர்களுக்கு சிகிச்சையளிக்க சிறப்பு தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. யாருக்கேனும் ஓமிக்ரான் அறிகுறிகள் இருந்தால் உடனடியாக சிகிச்சியளிக்கும் வகையில் 30 படுக்கைகள் கொண்ட வார்டு உருவாக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்காக தனி வார்டு அமைக்கப்பட்டுள்ளது. அதிதீவிர சிகிச்சை பிரிவாக அமைக்கப்பட்டுள்ள இந்த வார்டில் அனைத்து படுக்கைகளிலும் செயற்கை சுவாச கருவி பொருத்தப்பட்டுள்ளது.

16 பேர் கொண்ட மருத்துவர் குழு
எந்தவித தாமதமும் இல்லாமல் சிகிச்சை அளிக்க ஜீரோ டிலே வார்டாக உள்ள இங்கு 24 மணி நேரமும் சிகிச்சை அளிக்க 16 பேர் கொண்ட மருத்துவ குழு தயார் நிலையில் உள்ளது. சிகிச்சைக்கு தேவையான ஆக்சிஜன் வசதி, மருந்து மாத்திரைகள் தயார் நிலையில் உள்ளன. ஓமிக்ரான் பாதிப்பை கண்டறியும் டெக் பாத் கிட் இதுவரை வராத நிலையில் இன்று மாலைக்குள் கிடைக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளனர் மருத்துவர்கள்.

நெல்லை அரசு மருத்துவமனை
இதேபோல் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஓமிக்ரான் வார்டு தயார் நிலையில் உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயார் செய்யப்பட்டுள்ளன. தினமும் 32 ஆயிரம் லிட்டர் ஆக்சிஜனை தயாரிக்கும் வசதி இருப்பதால் ஆக்ஸிஜன் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்பில்லை என்கின்றனர் மருத்துவர்கள். நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 6 பேர் மட்டுமே கொரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர்.












Click it and Unblock the Notifications