மதுரை வடக்கு தொகுதி.. தளபதிக்கு குடைச்சல் கொடுக்கும் சரவணன்.. தவெக பிரிக்கப் போகும் வாக்குகள்!
மதுரை: மதுரை மாவட்டத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய கட்சிகள் நேருக்கு நேராக 7 தொகுதிகளில் போட்டியிடுகின்றன. மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, மதுரை மத்தி, மதுரை வடக்கு, திருப்பரங்குன்றம், திருமங்கலம், சோழவந்தான் ஆகிய தொகுதிகளில் மோதுகின்றன. இதில் மதுரை கிழக்கு தொகுதியில் அமைச்சர் மூர்த்தி தீவிரமாக பணியாற்றி வருகிறார்.
அதேபோல் மத்திய தொகுதியில் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் வெற்றியும் ஓரளவுக்கு உறுதியாகிவிட்டது. ஆனால் மதுரை வடக்கு தொகுதியில் மாவட்டச் செயலாளர் தளபதி களத்தில் இருக்கிறார். இவரை எதிர்த்து அதிமுக சார்பில் சரவணனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் தவெக சார்பாக கல்லணை மற்றும் நாதக சார்பாக திருநாவுக்கரசு போட்டியிடுகின்றனர்.

கடந்த தேர்தலில் திமுக சார்பாக போட்டியிட்ட தளபதி 73 ஆயிரம் வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார். அதேபோல் பாஜக சார்பாக போட்டியிட்ட சரவணன் சுமார் 50 ஆயிரம் வாக்குகளை பெற்றார். நாதக தரப்பில் சுமார் 15 ஆயிரம் வாக்குகளை பெறப்பட்டது. இந்த முறை தவெகவுக்கு கணிசமான அளவிற்கு மதுரை வடக்கு தொகுதியில் ஆதரவு இருந்து வருகிறது.
இதில் தளபதி நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர். சரவணன் முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவர். இந்த தொகுதியில் முக்குலத்தோர் வாக்குகள் பெரும்பான்மையாக இருக்கின்றனர். அதேபோல் சரவணனின் வீடு, மருத்துவமனை உள்ளிட்டவையும் வடக்கு தொகுதியிலேயே வருகிறது. அதேபோல் கடந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்ட போதே மக்களிடம் நன்கு அறிமுகமாகிவிட்டார்.
ஆனால் சரவணனுக்கு இருக்கும் ஒரே பிரச்சனை உட்கட்சி மோதல் தான். ஏனென்றால் செல்லூர் ராஜுவை மீறி சரவணன் எப்படியோ எடப்பாடி பழனிசாமியின் நம்பிக்கையை பெற்றுவிட்டார். முதலில் மதுரை வடக்கு தொகுதி பாஜகவுக்கே ஒதுக்கப்பட இருந்தது. ஆனால் கடைசி நேரத்தில் சரவணன் கைகள் ஓங்கியது. மதுரை மேற்கு தொகுதியில் செல்லூர் ராஜு வெல்வது கடினமாக இருக்கிறது.
ஒருவேளை செல்லூர் ராஜு தோல்வி அடைந்து சரவணன் வென்றால், மதுரை மாவட்டச் செயலாளர் பதவியை கைப்பற்றிவிட முடியும். இதனால் செல்லூர் ராஜு, ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் சரவணனுக்கு ஆதரவாக இல்லை. அதேபோல் களத்திலும் சரவணன் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். ஆனால் தவெகவினர் பிரிக்கும் வாக்குகள் சரவணனுக்கு எதிராக செல்லக்கூடும் என்று பார்க்கப்படுகிறது.
இந்த பகுதியில் செளராஷ்டிரா மக்கள் ஏராளமானோர் வசிக்கின்றனர். அவர்கள் தவெக பக்கம் செல்ல அதிக வாய்ப்புகள் உள்ளது. அதேபோல் மாவட்டச் செயலாளரான கல்லணை களத்தில் இருப்பதால், கணிசமான வாக்குகளை பெறுவார் என்று பார்க்கப்படுகிறது. இதனால் திமுக வேட்பாளர் தளபதி மீண்டும் வாகை சூடுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.












Click it and Unblock the Notifications