விடை பெற்ற பெரியார்.. விழி நிறைய நீர் ததும்ப நிற்கும் மதுரை!
Recommended Video
மதுரை: .... வந்து இறங்கியதும் சுவரை நோக்கி ஓடும் ஆண் கூட்டம்.. பூக்காரம்மாக்களிடம் போய் என்னத்தா இந்த பூவுக்குப் போய் இம்புட்டு விலை சொல்ற என்று வெவரமாக விலை பேசும் அம்மாக்கள், அக்காக்கள்.. மாப்ளே ஆரப்பாளையத்துல இறங்கிரு.. ஜாயின் பண்ணிக்கலாம் என தாக்கலைப் போடும் விடலைகள்... ஆச்சிக்கு சுகமில்லை திருப்புவனம் வரைக்கும் போய்ட்டு ஓடியாந்துர்ரேன்.. கவலைகளை சுமந்தபடி பஸ்ஸைப் பிடிக்க ஓடும் வெள்ளந்தி பிள்ளைகள்.. கலவையான உணர்வுகளின் சங்கமம்தான் மதுரை.. அந்த மதுரையின் மாற்ற முடியாத அங்கம்தான் இந்த பெரியார்..!
மதுரையைத் தாண்டி வெளியில் உள்ளவர்களுக்கு அது பெரியார் பஸ் நிலையம்.. ஆனால் காலம் காலமாக மதுரை மக்களுக்கு வெறும் பெரியார். பகுத்தறிவுத் தந்தைக்குப் பிறகு மதுரை மக்களின் மனதை அப்பிக் கொண்ட பெரியார் இந்த பஸ் நிலையம்தான்.
நீங்கள் மதுரையா... "பெரியார்" குறித்த உங்களது நினைவுகளை பகிர்ந்து கொள்ளலாமே?
பெரியார் என்ற அந்த ஒற்றை வார்த்தைக்குப் பின்னர் பல கோடி வரலாறுகள் பின்னிப் பிணைந்து கிடக்கின்றன. மதுரையில் பிறந்து வளர்ந்தவர்களுக்கு மட்டுமல்லாமல், மதுரையை டச் செய்து போகிறவர்களுக்கும் கூட மறக்க முடியாத பல அருமையான நினைவுகளைப் பரிசாக கொடுத்து அனுப்பத் தவறியதில்லை இந்த பெரியார் பஸ் நிலையம். இன்று இது மூடப்பட்டு விட்டது.
48 வயது
மதுரை பஸ் நிலையத்திற்கு பெரியார் என்று பெயர் சூட்டப்பட்டு கிட்டத்தட்ட 48 வருடங்கள் ஆகிறது. வைத்தது என்னவோ பெரியார் பஸ் நிலையம்தான். ஆனால் அது நாளடைவில் பெரியார் நிலையம் என்று சுருங்கி, பெரியார் என்று செல்லமாக மாறி விட்டது. மதுரை மக்களின் செல்லப் பிள்ளை இந்த பெரியார்.. அது ஒன்னுக்கு அடிக்க ஒதுங்குவதாக இருந்தாலும் சரி, ஒன்று கூடி பேசுவதாக இருந்தாலும் சரி, சூடா டீ சாப்பிட போவதாக இருந்தாலும் சரி.. பெரியாரைத் தொடாமல் ஒரு மதுரைக்காரனுக்கும் விடியாது.
ஒவ்வொன்றும் வரலாறு
மாணவர்கள், வேலைக்குப் போவோர், வெட்டியாய் சுற்றுவோர் என ஒவ்வொரு தரப்புக்கும் பெரியார் பஸ் நிலையம் ஒரு வரலாறு ஆகும். அதை விட முக்கியமாக மதுரையைச் சுற்றிலும் உள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கு இந்த பெரியார் பேருந்து நிலையம்தான் முக்கியமான ஜீவாதார உயிர்நாடி. சிறு வியாபாரிகளின் மையப் புள்ளி பெரியார் பஸ் நிலையம்தான். ஆனால் எல்லாவற்றுக்கும் தற்போது முற்றுப் புள்ளி வைக்கப்பட்டு விட்டது.. ஆம் பெரியார் பஸ் நிலையம் மூடப்பட்டு விட்டது. அங்கு ஸ்மார்ட் பஸ் ஸ்டாண்ட் வரப் போகிறது.
முதல் முறை கிடையாது
பெரியார் பஸ் நிலையத்தை மாற்றப் போவதாக பலமுறை சொல்லப்பட்டதுண்டு. சில முறை மூடப்பட்டதும் உண்டு. காரணம் இங்கு மழை பெய்தால் குளமாகி விடும். ஆனாலும் எந்தப் பிரச்சினையும் நிரந்தரமாக தீர்க்கப்பட்டதில்லை. பெரியார் அப்படியேதான் இத்தனை காலமும் இருந்து வந்தார். இடையில் சில நவீனமாக்கல், புதிய பாலம் என புது கேரக்டர்கள் அறிமுகமாகின. ஆனாலும் பெரியாரின் உருவம் பெரிதாக மாறவில்லை. ஆனால் தற்போது பெரியாரை முழுமையாக காலி செய்யப் போகிறார்கள்.
கடைகள் அகற்றப்படுகின்றன
மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் இந்த இடத்தில் பிரமாண்ட அடுக்கு மாடி பஸ் நிலையம் கட்டவுள்ளனர். இதற்காகவே பெரியார் பஸ் நிலையத்தை மூடி விட்டனர். தற்போது அங்குள்ள கடைகளை அதிகாரிகள் அகற்றி வருகின்றனர். அனைத்தும் அகற்றப்பட்ட பின்னர் கட்டுமானப் பணிகள் தொடங்குமாம். அருகில் உள்ள அருப்புக்கோட்டை பஸ் நிலையத்தையும் இணைத்து பிரம்மாண்டமான முறையில் இங்கு புதிய பஸ் நிலையம் வரப் போகிறதாம்.
2 வருடம் ஆகும்
புதிய பஸ் நிலையம் கட்டி முடிக்க 2 வருடங்கள் ஆகும் என்று சொல்லப்படுகிறது. மேலும் தற்போது உள்ள பஸ் நிலையத்தின் அடிச்சுவடு ஒன்று கூட மிச்சம் இருக்காது என்பதால் மதுரை மக்கள் நம்மிடமிருந்து விடை பெறுகிறதே பெரியார் என்ற கவலையில் வந்து எட்டிப் பார்த்து உச் கொட்டிச் செல்கின்றனர்.
மதுரையைச் சுற்றி வந்த கழுதை வேறு எங்கும் போகாது என்பார்கள்.. அப்படிப்பட்ட மதுரையின் முக்கிய அங்கம் இன்று விடை பெற்று விட்டது.. மறக்க முடியாத நினைவுகள்!