மதுரையில் மதுவிலக்கு பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றம்.. கமிஷனர் அதிரடி உத்தரவு.. பின்னணி என்ன?
மதுரை: மதுரையில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். 16 பேரை மாற்றி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் கடந்த மாதம் 19 ஆம் தேதி கள்ளச்சாராயம் குடித்ததில் 200க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். இதில் 67 பேர் சிகிச்சை பலனின்றி அடுத்தடுத்து உயிரிழந்தனர். சுமார் 160 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் விற்பனை செய்த வழக்கு தொடர்பாக விழுப்புரம் சி.பி.சி.ஐ.டி போலீசார் வழக்குப்பதிவு செய்து இதுவரை 24 பேரை கைது செய்துள்ளனர். கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவர்களின் நீதிமன்ற காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது.
கள்ளக்குறிச்சி சம்பவத்தால், கள்ளக்குறிச்சி மாவட்ட எஸ்.பி உட்பட காவல்துறை அதிகாரிகள் பலர் மாற்றப்பட்டனர். கள்ளக்குறிச்சி சம்பவத்தை தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கள்ளச்சாராய விற்பனையை தடுக்க காவல்துறையினர் தீவிர நடவடிக்கைகளை தொடங்கினர்.
மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதிகளிலும் சட்டவிரோதமாக மது விற்பனை நடைபெறுவதாக புகார்கள் எழுந்த வண்ணம் இருக்கின்றன. குறிப்பாக, மதுரை மாநகர் பகுதியில் கடந்த சில நாட்களாக சட்டவிரோத மது விற்பனை அதிகரித்துள்ளதாக புகார் எழுந்தது.
இந்நிலையில், சட்டவிரோத மது விற்பனையை கட்டுப்படுத்த மது விலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் முறையாக பணியாற்றவில்லை என்றும் புகார் எழுந்தது. இதையடுத்து மதுரை மாநகர காவல் ஆணையர் அதிரடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.
மதுரையில் மதுவிலக்கு அமலாக்க பிரிவு (PEW) காவல்துறையினர் கூண்டோடு மாற்றப்பட்டுள்ளனர். மதுவிலக்கு சார்பு ஆய்வாளர், சிறப்பு ஆய்வாளர் உட்பட 16 பேரை மாற்றி மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.












Click it and Unblock the Notifications