இன்று முழு ஊரடங்கு.. சேலம், மதுரையில் ஈ, காக்கா இல்லாமல் வெறிச்சோடி காணப்படும் சாலைகள்
மதுரை/சேலம்: தமிழகத்தில் மதுரை, சேலம் உள்ளிட்ட நகரங்களில் முழு ஊரடங்கு காரணமாக இறைச்சிக் கடைகள், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மூடப்பட்டதால் வெறிச்சோடி காணப்படும் முக்கிய சாலைகள்.
மதுரை மாவட்டத்தில் மதுரை மாநகராட்சிக்கு எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலும், பரவை பேரூராட்சி, மதுரை கிழக்கு, மதுரை மேற்கு, திருப்பரங்குன்றம் ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட கிராம ஊராட்சிகளிலும் ஜூன் 24-ஆம் தேதி முதல் 14-7 - 20 வரை ஊரடங்கு அமலில் இருந்தது 15-7-20 தேதி முதல் சில தளர்வுகள் மதுரை மாவட்டத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த நோய் ஓரளவு குறைந்திருந்தாலும் நோய்த்தொற்று முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக மதுரை மாவட்டம் முழுவதும் கொரோனா நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிகரிப்பதை கட்டுப்படுத்தும் வகையில் இம்மாதம் முழுவதும் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் எவ்வித தளர்வும் இன்றி மதுரை மாவட்டத்தில் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

வெறிச்சோடிய நிலை
இந்த மாதம் கடைசி உள்ள அதன்படி இன்று மதுரை மாவட்டம் முழுவதும் இறைச்சி கடை, காய்கறி, சிறிய மளிகைக் கடைகள் உட்பட எந்த கடைகளும் திறக்கப்படவில்லை, வாகனங்கள் இயங்கவில்லை. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் ஆரப்பாளையம் பேருந்து நிலையம் கோரிப்பாளையம் தெப்பக்குளம் மதுரை மாநகரில் மட்டும் மாவட்டம் முழுவதும் வெறிச்சோடிய நிலை காணப்படுகிறது.

தேவைகள்
பெட்ரோல் பங்குகளுக்கும் இன்று விடுமுறை விடப்பட்டுள்ளது. ஆம்புலன்ஸ், பால், மருத்துவ சிகிச்சை போன்ற அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே பெட்ரோல் பங்கில் பெட்ரோல் வழங்கப்படும். இந்நிலையில் நாளை முதல் பெட்ரோல், டீசல் பங்குகளில் முகவசம் அணிந்து வரும் வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே பெட்ரோல் டீசல் வழங்கப்படுமென அறிவித்துள்ளது.
போலீஸார்
அது போல் சேலத்திலும் முழு ஊரடங்கு காரணமாக கடைகள் அடைக்கப்பட்டுள்ளதால் முக்கிய சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. அரசின் உத்தரவை மீறி அத்தியாவசிய தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வரும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க சேலம் மாநகர பகுதிகளில் மட்டும் 40 இடங்களில் தடுப்புகள் அமைத்து போலீசார் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணியில் 500 க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.
வழக்கு பதிவு
அவ்வாறு அத்தியாவசிய தேவை இன்றி வெளியே வரும் நபர்களின் வாகனங்கள் உடனடியாக பறிமுதல் செய்யப்படுவதோடு உரிய நபர்கள் மீது வழக்குப் பதிவும் செய்யப்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க மாநகர காவல்துறையினர் ட்ரோன் கேமரா மூலமாகவும் கண்காணித்து வருகின்றனர்.
மேலும் அரசின் தடை உத்தரவை மீறி யாரேனும் தங்களது வணிக கடைகளைத் திறந்து வைத்தால் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
சேலம் மாவட்டத்தை பொருத்தவரை இதுவரை 2845 நபர்கள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2371 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில் மீதமுள்ள நபர்கள் அரசு மற்றும் அரசு அங்கீகரித்த தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.












Click it and Unblock the Notifications