பாஜகவில் மனைவியுடன் இணைந்தார்...பிரதமர் பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர்!!
மதுரை: மன் கி பாத் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பாராட்டிய மதுரை சலூன் கடைக்காரர் தனது மனைவியுடன் பாஜகவில் சேர்ந்தார்.
தனது மகளின் கல்விச் செலவுக்காக சேமித்து வைத்து இருந்த ரூ. 5 லட்சத்தை கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஏழைகளுக்கு உதவுவதற்கு மதுரையைச் சேர்ந்த சலூன் கடைக்காரர் மோகன் செலவழித்து இருந்தார். இதையடுத்து, கடந்த மே மாதம் நடந்த மன் கி பாத் நிகழ்ச்சியில் மோகனை பிரதமர் மோடி பாராட்டினார்.
இதையடுத்து யார் அந்த மோகன் என்று தமிழகமே அவரை திரும்பிப் பார்த்தது. அவரது வீட்டுக்கு பாஜக தலைவர்கள் படையெடுத்து வாழ்த்துக்கள் தெரிவித்தனர். தமிழக பாஜக தலைவர் எல். முருகன் இவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பாராட்டு தெரிவித்தார். இந்த நிலையில் அவர் பாஜகவில் சேர இருப்பதாக வலுவாக பேசப்பட்டது. ஆனால், இதை அப்போது மோகன் மறுத்து இருந்தார்.
இந்த நிலையில் தனது மனைவி பாண்டீஸ்வரியுடன் பாஜகவில் தன்னை மோகன் இணைந்துள்ளார். மாநில பொதுச் செயலாளர் சீனிவாசன் முன்னிலையில் இருவரும் பாஜகவில் சேர்ந்தனர்.
ஞானம் மிக்க ராசா.. சரியான நேரத்தில், சரியான ஆக்ஷன்.. லட்டு பதவி தந்து கரெக்டாக கவுரப்படுத்திய திமுக
மதுரை மேலமடை பகுதியில் மோகன் சலூன் கடை நடத்தி வருகிறார். கொரோனா தொற்று முடக்கத்தின் துவக்கத்தில் தனது மகளின் கல்விச் செலவுக்கு வைத்திருந்த ரூ. 5 லட்சத்தில் அரிசி, பருப்பு, காய்கறி வாங்கி 1,000த்துக்கும் மேற்பட்டவர்களுக்கு தொகுப்பாக வழங்கி இருந்தார். இதையடுத்து இவரை மோடி பாராட்டி இருந்தார். ''ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழைகளுக்கு உதவி வருகிறார். தனது வருமானத்தை மக்களுக்காக செலவழிக்கும் அவருக்கு எனது பாராட்டுக்கள்'' என்று மோடி தெரிவித்து இருந்தார்.