Madurai Sanitation Workers Protest: மதுரையில் தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடங்கியது! பணி நிரந்தரம் கோரி முழக்கம்!
மதுரை: சென்னையில் ரிப்பன் மாளிகை வெளியே காத்திருப்பு போராட்டத்தில் தூய்மை பணியாளர்கள் ஈடுபட்டிருந்ததும், போராடிய தூய்மை பணியாளர்களை தமிழக அரசு கையாண்ட விதமும் கடும் விமர்சனங்களுக்கு உள்ளாகியிருந்தது. இந்நிலையில் மதுரையில் இன்று தூய்மை பணியாளர்களின் போராட்டம் தொடங்கியிருக்கிறது.
மதுரை மாநகராட்சி மொத்தம் 5 மண்டலங்களையும் 100 வார்டுகளையும் உள்ளடக்கி இருக்கிறது. 500க்கும் மேற்பட்ட தூய்மை பணியாளர்கள் இரவு பகலாக வேலை பார்த்து மாநகரை தூய்மையாக வைத்திருக்கிறார்கள்.

ஆனால் தூய்மை பணியாளர்களுக்கான போதிய பலன்கள் கிடைப்பதில்லை என்று தொடர்ந்து குற்றச்சாட்டு எழுகிறது. ஓய்வூதியம், காப்பீடு, பிஎஃப் ஆகியவை கிடைப்பதில்லை என்றும் உழைப்பு சுரண்டல் அதிகமாக இருப்பதாக புகார்கள் எழுந்தன. இதனையடுத்து இந்த பிரச்சனைகளுக்கு தீர்வு காணவும், 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றும் தங்களை நிரந்தர பணியாளராக மாற்றவும் தூய்மை பணியாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டபோது அவை தொடர்ந்து புறக்கணிக்கப்பட்டு வந்திருக்கின்றன.
இந்நிலையில் தங்களது கோரிக்கையை முன்வைத்து, தூய்மை பணியாளர்கள் காத்திருப்பு போராட்டத்தில் இறங்கியுள்ளனர். இவர்களின் மிக முக்கிய கோரிக்கை தனியார் மயத்தை கைவிட வேண்டும் என்பதாகும் .
மாநகராட்சி நகராட்சி பேரூராட்சி பணிகளில் தனியார் மயத்தை புகுத்தும் அரசாணை 152 மற்றும் 139-ஐ ரத்து செய்ய வலியுறுத்தியும், சுகாதாரம் மற்றும் பொறியியல் பிரிவில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு குறைந்த பட்ச ஊதிய அரசாணை 62(2D) -யின் படி மாதச் சம்பளமாக 26,000 ரூபாய் வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், தீபாவளி போனசாக 1 மாத ஊதியம் வழங்க வேண்டும் என்றும் இந்த போராட்டம் நடைபெறுகிறது.
போராட்டம் தொடர்பாக ஏற்கெனவே தொழிற்சங்கம் சார்பில் அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதனையடுத்து பேச்சுவார்த்தையும் நடந்திருக்கிறது. ஆனால் பேச்சுவார்த்தையில் தோல்வி ஏற்பட்டதால் தூய்மை பணியாளர்கள் போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications