ஒரு வேலையும் நடக்கல! எதுக்கு எம்.எல்.ஏ. பதவி? பூமிநாதன் குமுறிய பின்னணி! சமாதானம் செய்த துரை வைகோ!
மதுரை: மதுரை தெற்கு தொகுதியில் ஒரு வேலையும் நடப்பதில்லை என்றும் தனக்கெதுக்கு எம்.எல்.ஏ. பதவி, பேசாமல் ராஜினாமா செய்துவிடுகிறேன் என கட்சித் தலைமையிடம் குமுறியிருக்கிறார் மதிமுக சட்டமன்ற உறுப்பினர் பூமிநாதன்.
மதுரை மாநகராட்சிக் கூட்டத்தில் பேசுவதற்கு முன்பாகவே தனது ராஜினாமா முடிவு குறித்து வைகோவிடம் அவர் தெரிவித்ததாகவும் அது போல் எதுவும் செய்துவிட வேண்டாம், அவசரம் வேண்டாம் என அவரும் துரை வைகோவும் சமாதானம் செய்து வைத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

பொறுமைக்கும் ஒரு எல்லை உண்டு என்பதை போல் பொறுமையான மனிதரான பூமிநாதனே பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்திருப்பது அரசு நிர்வாகம் எந்தளவு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதற்கு உதாரணமாக பார்க்கப்படுகிறது.
மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதனுக்கு மட்டுமல்ல தமிழகத்தின் பல எம்.எல்.ஏ.க்களுக்கும் இதே நிலை தான். இதற்கு காரணம் அதிகாரிகளின் அலட்சியப் போக்கு தான். தங்களுக்கு தெரிந்த ரூட் மூலம் மாவட்ட அமைச்சர்களை காக்கா பிடித்துக்கொள்ளும் அதிகாரிகள் யாரையும் சட்டை செய்யாமல் செயல்படுகின்றனர்.
மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்.எல்.ஏ. பூமிநாதனை பொறுத்தவரை அவர் கொடுத்த மனுக்கள் மீது அதிகாரிகள் எந்தவொரு நடவடிக்கையும் எடுப்பதில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. இதனால் வெறுத்துப் போன அவர் என்ன பெரிய எம்.எல்.ஏ. பதவி, இதை வைத்து நாலு பேருக்கு நல்லது செய்ய முடியாத போது பதவி எதற்கு என்ற முடிவுக்கு வந்துவிட்டார்.
இதனிடையே அதிகாரிகள் மீது பூமிநாதன் எம்.எல்.ஏ. அதிருப்தியில் இருப்பதை போலவே மதுரை மாநகராட்சி துணை மேயர் நாகராஜனும் அதிருப்தியில் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. ஒரு காலத்தில் எம்.எல்.ஏ. பேசுகிறேன் என்றால் அதிகாரிகள் அலறியடித்துக் கொண்டு அவர்கள் சொல்லும் பணியை முடிக்கப் பார்ப்பார்கள். இன்றோ எம்.எல்.ஏ.க்களை ஒரு பொருட்டாகவே அரசு உயர் அதிகாரிகள் மதிக்காத நிலை தான் இருக்கிறது.












Click it and Unblock the Notifications