தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை! வட மாநில வணிகர்கள் முறைகேடு -அமைச்சர் மூர்த்தி
மதுரை: தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக தமிழகத்தில் தொழில் செய்யும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக வேதனைத் தெரிவித்தார்.
மதுரையில் நடைபெற்ற தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு விழாவில் பேசிய அவர் இதனைக் கூறினார்.
என் சட்டைப் பையில் விநாயகர் படம்.. யாருடைய உரிமையிலும் முதல்வர் தலையிட மாட்டார்.. அமைச்சர் மூர்த்தி
வணிகர் சங்க பேரமைப்பு
தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் முப்பெரும் விழா மதுரையில் நடைபெற்றது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி, தமிழகத்தில் 3 லட்சம் வணிகர்கள் வரி செலுத்தவில்லை என்ற தகவலை வெளியிட்டார். வணிகர்கள் இப்படி வரி செலுத்தாமல் இருந்தால் தமிழகம் எப்படி வளர்ச்சி அடையும் என வேதனை தெரிவித்த அவர் வட மாநில வணிகர்கள் வரி முறைகேடுகளில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டினார்.
துணை நிற்போம்
தமிழக வணிகர்களுக்கு அரசு என்றும் துணை நிற்கும் என்றும் வட மாநிலங்களை சேர்ந்த வணிகர்களை தமிழகத்திலிருந்து அப்புறப்படுத்த இங்குள்ள வணிகர்கள் முன்வர வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர் மூர்த்தி, வணிகர்கள் சரியாக வரி செலுத்தினால் தமிழகம் வளர்ச்சி அடையும் எனக் கூறினார். வணிகர் நல வாரியத்தில் புதிதாக ஐம்பதாயிரம் பேர் இணைந்துள்ளதாக கூறிய அவர் அந்த வாரியத்தின் மூலம் நலிந்த வணிகர்களுக்கு உதவி செய்யப்படும் எனத் தெரிவித்தார்.
அரிசிக்கு ஜி.எஸ்.டி.
இதனிடையே அவரைத் தொடர்ந்து பேசிய தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா, அரிசிக்கு 5% ஜி.எஸ்.டி. விதிக்கப்பட்டதை கண்டித்து வரும் 22-ஆம் தேதி சென்னையில் மிகப்பெரும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என அறிவித்தார். அரிசிக்கு விதிக்கப்பட்ட ஜி.எஸ்.டி.யை திரும்பப்பெறும் வரை போராட்டங்கள் தொடரும் என மத்திய அரசுக்கு அவர் எச்சரிக்கை விடுத்தார். இந்த விக்கிரமராஜாவின் மகன் பிரபாகர் ராஜா சென்னை விருகம்பாக்கம் தொகுதி திமுக எம்.எல்.ஏ.வாக இருப்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் மூர்த்தி
வணிகர் சங்க விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு வணிகர்கள் 3 லட்சம் பேர் வரி செலுத்தவில்லை என அவர்களை பற்றியே அந்த விழா மேடையில் அமைச்சர் மூர்த்தி பேசியிருப்பது அவரது துணிச்சலை காட்டுகிறது.