தமிழகத்திற்கு எண்ணற்ற வளர்ச்சித் திட்டங்கள் காத்திருக்கிறது! சஸ்பென்ஸ் உடைத்த அமைச்சர் பி.டி.ஆர்.!
மதுரை: தமிழக மக்களுக்கு வரும் நிதி நிலை அறிக்கையில் 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பல்வேறு எதிர்கால வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க இருப்பதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருக்கிறார்.
மதுரையில் திமுக வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்து வரும் அவர் இதனைக் கூறியிருக்கிறார்.
மதுரையை பொறுத்தவரை நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்த குறையும் இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யபடும் என்ற உறுதியையும் அளித்தார்.
யார் தப்பு? பிடிஆர் vs விஜயபாஸ்கர்.. பரபரத்த அவை! குறுக்கே புகுந்த அப்பாவு! என்ன சொன்னார் தெரியுமா?
மதுரையில் பிரச்சாரம்
தமிழக நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மதுரை மாநகராட்சி வார்டு எண் 57- ல் திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர் இந்திராணி என்பவரை ஆதரித்து ஆரப்பாளையம் மந்தை திடல் பகுதியில் வேன் மூலம் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய அவர் ஒரு தொகுதிக்கு சட்டமன்ற உறுப்பினர் எவ்வளவு முக்கியமோ அந்த அளவுக்கு வார்டுக்கு முக்கியமானவர் கவுன்சிலர் எனக் கூறினார்.
நிதி ஒதுக்கீடு
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பெண்களுக்கு அதிக அளவில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பெண்களுக்கு கல்வி, அரசியல், நிர்வாகம் உள்ளிட்டவைகளில் வாய்ப்பளிக்கும் நாடு தான் வளர்ச்சி பாதையில் செல்லக்கூடியது எனவும் தெரிவித்தார். மதுரையை பொறுத்தவரை நிதி ஒதுக்கீடு செய்வதில் எந்த குறையும் இல்லாமல் போதுமான நிதி ஒதுக்கீடு செய்யபடும் என்ற உறுதியை அளித்தார் அமைச்சர் பி.டி.ஆர்.
அன்னை மீனாட்சி அருள்
மேலும், தமிழக மக்களுக்கு வரும் நிதி நிலை அறிக்கையில் 8 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு பல்வேறு எதிர்கால வளர்ச்சி திட்டங்களை அறிவிக்க இருப்பதாக தெரிவித்தார்.இரு முறை மதுரை மத்திய தொகுதியில் தன்னை ஒரு ரூபாய் பண பட்டுவாடா இல்லாமல் வெற்றி பெற வைத்த மக்களாலும், அன்னை மீனாட்சியின் அருளாலும் தனக்கு இந்த அமைச்சர் பொறுப்பு கிடைத்துள்ளதாக கூறினார்.
பணம் வரும் போகும்
ஒவ்வொரு கவுன்சிலரும் திமுக கவுன்சிலராக இருந்தால் தாங்கள் ஒன்றிணைந்து வேலை செய்வதற்கும் அவர்கள் தவறு செய்யும் பட்சத்தில் தட்டிக் கேட்பதற்கும் சரியாக இருக்கும் என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார். பணம் இன்று வரும்; நாளை போகும் என்பதால் மக்கள் பணி செய்யக்கூடிய வேட்பாளருக்கு வாய்ப்பளிப்பது வாக்காளர்களின் கடமை என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசினார்.