இணைந்த கைகள்! புரட்சி தலைவர்னா அது தலைவர் ஸ்டாலின் தான்! ஒரே போடாக போட்ட பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
மதுரை : மதுரை திமுகவில் உட்கட்சி மோதல் இருப்பதாக கூறப்பட்ட நிலையில் திமுக தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என் வீட்டில் கதவு திறந்தே இருக்கும். யாரும் எப்போது வேண்டுமானால் வரலாம் எனவும், தலைவர்களில் புரட்சித்தலைவர் என்றால் அது நம் தலைவர் தான் என தமிழக நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் அதிரடியாக கூறியிருக்கிறார்.
மதுரையில் கடந்த 4 நாட்களுக்கு முன்னர் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை ஒட்டி திமுகவினருக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மட்டும் கலந்துகொண்டனர்.
திமுக முக்கிய பிரபலமும் மாவட்ட செயலாளருமான தளபதி மற்றும் மதுரையை சேர்ந்த மற்ற அமைச்சர்கள், திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட யாரும் கலந்து கொள்ளவில்லை. இதனால் மதுரை திமுகவில் உட்கட்சி பூசல் நிலவுவதாக யூகங்கள் உலாவின.

உட்கட்சி மோதல்
திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சையும் மீறி, கட்சியில் சிலர் செயல்படுவது வேதனை அளிக்கிறது. தலைவருக்காக நடத்தப்படும் நிகழ்ச்சியை சிலர் புறக்கணித்ததுடன், வேறு யாரும் பங்கேற்க கூடாது என மிரட்டல் விடுத்தது ஆச்சரியம் அளிக்கிறது. கட்சியினர் யாரும் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது. தன்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் சிலர் உள்ளதாகவும், அவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி ஏற்படும் எனவும் பழனிவேல் தியாகராஜன் பேசியது பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்
இந்த நிலையில் இன்று மதுரையில் நடைபெற்ற திமுக செயற்குழு கூட்டம் விமர்சனங்களை தவிடு பொடியாக்கும் வகையில் நடைபெற்றதாக கூறுகின்றனர் மதுரை திமுகவினர். மதுரை அண்ணா நகரில் நடைபெற்ற இந்த செயற்குழு கூட்டத்தில் மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் தளபதி நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முன்னாள் அமைச்சர் பொன் முத்துராமலிங்கம் கலந்து கொண்டனர். கூட்டத்தில் திமுக தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட முகஸ்டாலினுக்கு வாழ்த்துக்களும், பொதுக்குழு உறுப்பினர்களுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது.

முதல்வர் ஸ்டாலின்
மேலும் தேவர் ஜெயந்திக்காக மதுரை வழியாக பசும்பொன் செல்லும் முதல்வருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்," யாரும் எந்த ஒரு தனிநபரும் அரசியல் செய்யக்கூடாது. திமுகவை பொருத்தவரை எல்லாரும் விவாதித்து முடிவெடுத்தாலும் தலைவரின் முடிவுக்கு கட்டுப்படுவது தான் சிறப்பான குணம்.

ஒரே புரட்சித் தலைவர்
எனது குடும்பம் தலைமுறை தலைமுறையாக அரசியலில் கொள்கை நிலைப்பாட்டை மாற்றாமல் இருக்கிறோம். தலைவர்களில் புரட்சித்தலைவர் என்றால் அது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். என்னை போன்ற அடிப்படை தொண்டருக்கு கூட நிதியமைச்சர் பதவி வழங்கியிருக்கிறார். அடிப்படை தொண்டனுக்கும் நிதியமைச்சர் பொறுப்பு கொடுத்து ஊக்கமும் உற்சாகமும் அளித்து வருகிறார். அடிப்படை தொண்டனுக்கு பதவி கொடுத்து ஊக்கப்படுத்தும் ஒரே தலைவர் நம் முதல்வர் தான். கட்சி தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் என் வீட்டில் கேட் போடவில்லை. எப்போதும் திறந்து தான் இருக்கும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் விருந்தினராக வரலாம்" என்றார்.












Click it and Unblock the Notifications