3 பேருக்கு மாவுக்கட்டு.. மதுரை நாதக நிர்வாகியை கொலை செய்தவர்களுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது எப்படி?
மதுரை: நாம் தமிழர் கட்சி பிரமுகர் பாலசுப்பிரமணியன் கொலை வழக்கில் கைதானவர்கள் 3 பேரின் காலில் எலும்பு முறிவு ஏற்பட்ட நிலையில், கட்டுப் போடப்பட்ட நிலையில் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.
மதுரை செல்லூர் பகுதியைச் சேர்ந்த பாலசுப்ரமணியன், நாம் தமிழர் கட்சியின் மதுரை வடக்கு தொகுதி துணைச் செயலாளராக இருந்து வந்தார். இவர் கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை 6.30 மணியளவில் வழக்கம் போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் வீட்டின் அருகே உள்ள வல்லபாய் சாலையில் பாலசுப்ரமணியன் நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்தார்.

அப்போது பாலசுப்பிரமணியனை பின்தொடர்ந்த 4 பேர் கொண்ட கும்பல், அரிவாள், கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் அவரது தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டினர். இதில் ரத்த வெள்ளத்தில் சரிந்த பாலசுப்பிரமணியன் உயிரிழந்தார். அதைத்தொடர்ந்து பாலசுப்பிரமணியன் உடல் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்யப்பட்டது.
இந்த கொலைச் சம்பவம் தொடர்பாக தல்லாகுளம் காவல்துறையினர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேர் கொண்ட மர்ம கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடினர். சம்பவம் நடந்த இடத்தில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
தொடர்ந்து, மதுரை மாநகர காவல் ஆணையர் லோகநாதன் நேரடி கண்காணிப்பில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில், மகாலிங்கம் என்பவருக்கும் அவரது தம்பி மருமகன் பாண்டியராஜன் என்பவருக்கும் சொத்து பிரச்சனை இருந்து வந்துள்ளது. இதற்கிடையில் பாண்டியராஜனின் சகோதரரும் நாதக நிர்வாகியாக செயல்பட்டு வந்தவருமான பாலசுப்ரமணியன், மகாலிங்கத்திடம் பிரச்சனை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு சுமுகமாகத் தீர்வு காணும் விதமாக பாண்டியராஜனின் மகள் பிரியா என்பவரை மகாலிங்கத்தின் மகன் அழகு விஜய் என்பவருக்கு திருமணம் செய்து வைத்து உள்ளனர். திருமணமான பிரியா அழகுவிஜய் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி வழக்கு தொடர்ந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் பாண்டியராஜன் மற்றும் மாகலிங்கம் இடையே மீண்டும் சொத்துப் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பாண்டியராஜன் அளித்த புகாரின்படி மகாலிங்கம் மற்றும் அவரது உறவினர்கள் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதனை தொடர்ந்து ஜாமீனில் வெளியே வந்த மகாலிங்கத்தை, பாண்டியராஜனும் பாலசுப்பிரமணியனும் கொலை செய்யத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனை அறிந்து கொண்ட மகாலிங்கம், தன்னிடம் லோடு மேன்களாக வேலை பார்த்து வந்த பரத், கோகுலகண்ணன், பென்னி மற்றும் ஒரு சிறார் என 4 பேரை கொண்ட கும்பலை வைத்து பாலமுருகனை வெட்டிப் படுகொலை செய்துள்ளதாக போலீசார் விசாரணையில் தெரியவந்தது.
நாம் தமிழர் கட்சி நிர்வாகி பாலசுப்பிரமணியன் கொலை சம்பவம் மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் கொலை சம்பவத்தில் ஈடுபட்ட சிறார் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும், கொலைக்கு உடந்தையாக இருந்த மாகலிங்கம் மற்றும் மகன் அழகு விஜய் ஆகியோர் இன்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், நாதக நிர்வாகி கொலை வழக்கில் கைதானவர்களில் 3 பேர் தலா ஒரு காலில் பெரிய கட்டுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. கொலையாளிகளுக்கு எலும்பு முறிவு ஏற்பட்டது பற்றி போலீஸ் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்ட பரத், நாக இருள்வேல், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 4 பேரை போலீசார் தேடி வந்தபோது, அவர்கள் 4 பேரும் செல்லூர் ரயில் மேம்பாலத்திலிருந்து நடந்து சென்றதை அறிந்த காவல்துறையினர் அவர்களை பிடிக்க முயற்சித்து உள்ளனர்.
போலீசார் தங்களை பின்தொடர்வதை அறிந்த பரத், கோகுலகண்ணன் மற்றும் பென்னி ஆகிய 3 பேரும் ரயில்வே மேம்பாலத்தில் இருந்து குதித்துள்ளனர். அப்போது 3 பேருக்கும் காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மூவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு கட்டுப் போடப்பட்டு சிகிச்சையில் உள்ளனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications