டீக்கடையில் திடீர் ஆலோசனை.. செய்தியாளர்கள் கேட்ட சரமாரி கேள்வி.. டக்கென சிரித்த ஓபிஎஸ்.. ‘சரி வாங்க’
மதுரை : மதுரையில் இருந்து தனது சொந்த ஊரான பெரியகுளம் செல்லும் வழியில், டீ அருந்தியபடி தனியார் விடுதியில் தனது ஆதரவாளர்களைச் சந்தித்துப் பேசினார் ஓ.பன்னீர்செல்வம்.
அங்கிருந்து அவர் கிளம்பும்போது செய்தியாளர்கள் சூழ்ந்து கேள்வி எழுப்பினர். முதலில் அவர்களைத் தவிர்த்த ஓபிஎஸ், செய்தியாளர்கள் கேட்டுக்கொண்டதற்காக சிரித்தபடி, பிரஸ்மீட்டுக்கு சம்மதித்தார்.
செய்தியாளர்கள், சிபிசிஐடி விசாரணை, சுற்றுப்பயணம் குறித்து எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு, ஒரே வரியில் பதில் கூறினார் ஓபிஎஸ்.
உண்மைத்தன்மையை விளக்கும் சுற்றுப் பயணத்தை விரைவில் தொடங்குவேன் என ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். அப்போது மதுரை முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட அவரது ஆதரவாளர்கள் உடனிருந்தனர்.
எடப்பாடிக்கு செக்.. அதிமுக அலுவலகத்தில் யாரையும் அனுமதிக்க கூடாது.. டிஜிபியிடம் ஓபிஎஸ் தரப்பு புகார்
மாறிய தீர்ப்பு
ஈபிஎஸ் நடத்திய பொதுக்குழு கூட்டம் செல்லாது என்று அறிவிக்கக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தொடர்ந்த வழக்க்கில் ஆகஸ்ட் 17ஆம் தேதி தீர்ப்பளித்த தனி நீதிபதி, 11ஆம் தேதி நடந்த பொதுக்குழு செல்லாது என்று உத்தரவிட்டார். தனி நீதிபதியின் உத்தரவை எதிர்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் இரு நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதில் தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், பொதுக்குழு செல்லும் என்றும், தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப்படுவதாகவும் உத்தரவிட்டது.
ஓபிஎஸ் அப்பீல்
இதனையடுத்து, இந்த தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்வோம் என அறிவித்தார் ஓ.பன்னீர்செல்வம். தீர்ப்பு வந்ததுமே தேனி மாவட்டம் பெரியகுளத்தில் உள்ள தனது வீட்டில் இருந்த ஓபிஎஸ் உடனடியாக சென்னை கிளம்பினார். சென்னை சென்ற அவர், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். அதையடுத்து, செவ்வாய்க்கிழமை உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
பெரியகுளத்தில் இருந்து ஆலோசனை
பின்னர், சென்னையில் இருந்து சொந்த ஊரான பெரியகுளத்திற்குச் சென்றார் ஓ.பன்னீர்செல்வம். தனது வீட்டில், ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார் ஓ.பன்னீர்செல்வம். அடுத்தகட்டமாக மேற்கொள்ள வேண்டிய நகர்வுகள் குறித்து சட்ட வல்லுநர்களுடன், முக்கியமான நிர்வாகிகளுடனும் பெரியகுளத்தில் இருந்தபடி போன் மூலமாகவே ஓபிஎஸ் ஆலோசித்து வருவதாகக் கூறப்படுகிறது.
சுற்றுப்பயணம்
விரைவில் சுற்றுப்பயணத்தை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ள ஓ.பன்னீர்செல்வம் அதற்கிடையே, பூலித்தேவன் பிறந்த நாளுக்கு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் சென்றார். தீர்ப்புக்குப் பிறகு பழனி முருகன் கோவில் சென்ற ஓபிஎஸ் தங்கத்தேர் இழுத்து வழிபாடு செய்தார். தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களிலும் நடக்கும் கட்சியினர் இல்ல நிகழ்ச்சிகளிலும் பங்கெடுத்து வருகிறார் ஓபிஎஸ்.
டீ குடித்தபடி ஆலோசனை
இந்நிலையில் நேற்று மதுரையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டார். இதையடுத்து, மதுரையில் இருந்து பெரியகுளம் திரும்பும் முன், கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனது ஆதரவாளர்களுடன் தேநீர் அருந்தியவாறு ஆலோசனை நடத்தினார் ஓபிஎஸ். பின்னர், அப்பகுதியைச் சேர்ந்த ஆதரவாளர்களுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
பிரேக்கிங் போடணும்
அங்கிருந்து அவர் கிளம்பும்போது, அவருக்காக காத்திருந்த செய்தியாளர்கள் அவரிடம் மைக்கை நீட்டி, பல்வேறு கேள்விகளை எழுப்பினர். ஆனால், பேட்டியை தவிர்த்துவிட்டு காரில் ஏறச் சென்றார் ஓபிஎஸ். அவரிடம் சில செய்தியாளர்கள், 'ஒரு கேள்விக்காவது பதில் சொல்லுங்க.. பிரேக்கிங் போடணும் சார்.." எனச் சிரித்தவாறு கேட்டனர்.
அப்படியா.. சரி வாங்க
அதை ஏற்று 'அப்படியா.. சரி எடுத்துக்கங்க.." என்றவாறே செய்தியாளர்களைச் சந்தித்த ஓபிஎஸ், "உண்மைத்தன்மையினை விளக்கும் சுற்றுப்பயணத்தை விரைவில் தொடங்குவேன்" எனப் பதில் அளித்துவிட்டு அங்கிருந்து தனது சொந்த ஊரான பெரியகுளத்திற்கு காரில் கிளம்பினார்.