அந்தப் பக்கம் எடப்பாடி ஆலோசனை கூட்டம்.. “அது கும்பல்”.. பட்டென சொன்ன ஓபிஎஸ்! மீண்டும் புரட்சி பயணமா?
மதுரை: கூடிய விரைவில் மீண்டும் புரட்சி பயணம் தொடங்க உள்ளேன் என்றும், இன்று எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறுவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
ஓ.பன்னீர்செல்வம் தனது புரட்சிப் பயணத்தை காஞ்சிபுரத்தில் இருந்து தொடங்குவார் என்று அறிவிக்கப்பட்டது. இதற்காக கடந்த 3ஆம் தேதி காஞ்சிபுரம் களியனூர் அருகே பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்தக் கூட்டத்தில் ஓ.பன்னீர்செல்வம் கலந்துகொண்டு பேசுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. 10 ஆயிரம் பேருக்கும் மேல் அமரும் வகையில் பொதுக்கூட்ட மேடை முன்பு இருக்கைகள் போடப்பட்டிருந்தன.

களியனூர் கிராமத்தில் இந்தப் பொதுக்கூட்டம் தொடங்கியது முதலே மழை பெய்யத் தொடங்கியது. எனினும், புரட்சி பயண தொடக்க விழா பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுவதற்காக ஓ.பன்னீர்செல்வம் மழையையும் பொருட்படுத்தாது மேடைக்கு வந்து சேர்ந்தார். ஆனால், மழை காரணமாக கூட்டம் கலைந்ததால் புரட்சிப் பயண பொதுக்கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அதிமுக அரசியல் ஆலோசகர் பண்ருட்டி ராமச்சந்திரன் அறிவித்தார்.
இந்நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து தலைமைக் கழகச் செயலாளர்களும், மாவட்டக் கழகச் செயலாளர்களும் பங்கேற்றனர்.
நாடாளுமன்ற தேர்தல் மற்றும் மதுரையை போன்று ஒவ்வொரு மாவட்டத்திலும் பொதுக்கூட்டங்கள் நடத்துவது, கட்சியின் வளர்ச்சி பணிகள் உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது. மேலும் ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த நிலையில் அதிமுக நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது.
இதற்கிடையே, மதுரை நாகமலை புதுக்கோட்டையில் திருமண விழா ஒன்றில் பங்கேற்ற ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், தொண்டர்களின் விருப்பப்படி விரைவில் மீண்டும் புரட்சி பயணம் தொடங்க உள்ளேன். உங்களிடம் சொல்லிவிட்டுத்தான் என் பயணத்தை ஆரம்பிப்பேன் என்று தெரிவித்துள்ளார்.
இன்று எடப்பாடி பழனிசாமி நடத்தும் மா.செக்கள் கூட்டம் பற்றி செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, இன்று நடைபெறுவது மாவட்ட செயலாளர்கள் கூட்டம் அல்ல, அது கும்பல் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். மேலும், பாரத் பெயர் மாற்றம் பற்றிய கேள்விக்கு, பெயர் மாற்றம் குறித்த முழுமையான முறையான அரசாணை வரட்டும், அதன்பிறகு அது பற்றி பேசலாம் என ஓபிஎஸ் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications