"தப்பு பண்ணா அடிங்க" ஸ்கூலில் மகனை சேர்க்கும் போதே பிரம்பு பரிசளித்த பெற்றோர்.. அரண்ட மதுரை
வெறும் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் தங்கள் மகனை அடிக்க அனுமதி கொடுக்கும் உறுதிமொழி பத்திரத்தையும் அந்த பெற்றோர்கள் ஆசியர்களிடம் சமர்ப்பித்தனர்.
மதுரை: தங்கள் 4 வயது மகனை பள்ளிக்கூடத்தில் சேர்த்த பெற்றோர், கையோடு பிரம்பையும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்த சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
தங்களின் மகன் சரியாக படிக்கவில்லை என்றாலோ, ஆசிரியர் சொல்படி கேட்டு ஒழுக்கமாக நடக்கவில்லை என்றாலோ அந்த பிரம்பை வைத்து அடிக்குமாறு அவர்கள் கூறியுள்ளனர்.
தவறு செய்த மாணவர்களை ஆசிரியர்கள் திட்டினால் கூட சண்டைக்கு போகும் பெற்றோருக்கு மத்தியில், மகன் ஒழுக்கமாக வளர அடி வாங்கினாலும் பரவாயில்லை என நினைக்கும் பெற்றோருக்கும் இருக்கதான் செய்கிறார்கள் என்பதற்கு இந்த சம்பவமே சிறந்த உதாரணம் ஆகும்.
ஒழுக்கம் கற்பித்த பிரம்பு
15 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழகத்தில் எந்தப் பள்ளியை கடந்து சென்றாலும் ஆசிரியர்கள் பாடம் எடுக்கும் சத்தமும், கூடவே மாணவர்களின் அலறல் சத்தமும் நிச்சயம் கேட்கும். பெற்றோர் பேச்சை கேட்காமல் ஒழுங்கீனாக நடக்கும் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து திருத்திய காலம் அது. அப்போது பிரம்படி தழும்புகளுடன் மாணவர்களை பார்ப்பது சர்வ சாதாரணமாக இருந்தது. இதனால் ஆசிரியர்கள் மீது பயம் கலந்த மரியாதையும், ஒழுக்கமும் மாணவர்களிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது மாணவர்கள் ஆசியர்களையே திட்டும், சீண்டும் சம்பவங்கள் அதிகரித்து உள்ளன.
பிரம்புடன் வந்த பெற்றோர்
ஆசிரியர்கள் தங்களை அடிக்க முடியாது என்ற துணிச்சலில் இன்று பள்ளி மாணவர்கள் செய்யும் அட்டூழியங்கள் தினமும் சமூகவலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. இதையெல்லாம் பார்த்து மனம் வெதும்பிய பெற்றோர் இருவர், தங்கள் 4 வயது மகனை பள்ளியில் சேர்க்க இன்று வந்த போது கூடவே பிரம்பையும் வாங்கி வந்து தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளனர். மதுரை மாவட்டம் செல்லூர் பகுதியை சேர்ந்தவர் சங்கரபாண்டியன்.
மதுரை தம்பதி
இவரது மனைவி தமிழரசி. இவர்களின் 4 வயது மகனான சக்தியை அங்குள்ள மனோகரா நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி வகுப்பில் இன்று சேர்த்தனர். அப்போது அவர்கள் 4 அடி நீளமுள்ள பிரம்பையும் கையில் எடுத்து வந்தனர். இதை பார்த்த தலைமை ஆசிரியர் பால் ஜெயக்குமார், எதற்கு இவர்கள் கையில் பிரம்பை எடுத்து வருகிறார்கள் என குழப்பம் அடைந்திருக்கிறார். பிறகு அவர்கள், அந்த பிரம்பை தலைமை ஆசிரியர் கையில் கொடுத்து, "சார்., எங்கள் மகன் சரியாக படிக்காமல் இருந்தாலோ, ஆசிரியர் சொல் பேச்சை கேட்காமல் இருந்தாலோ தாரளமாக இந்த பிரம்பால் அவனை அடிக்கலாம்" என கூறினார்.
உறுதிமொழிப் பத்திரம்
வெறும் வாய் வார்த்தையாக மட்டுமல்லாமல் தங்கள் மகனை அடிக்க அனுமதி கொடுக்கும் உறுதிமொழி பத்திரத்தையும் அவர்கள் சமர்ப்பித்தனர். இதுகுறித்து சங்கரபாண்டியன் - தமிழரசி தம்பதி கூறும்போது, "தவறு செய்யும் மாணவர்களை ஆசிரியர்கள் அடித்து திருத்த வேண்டாம். அடி விழும் என்ற பயம்தான் அவர்களை மீண்டும் அந்த தவறை செய்ய வைக்காது. இதுதான் அவர்கள் ஒழுக்கமான மனிதராக மாறுவதற்கு அடிப்படை. 'அடியாத மாடு பணியாது' என்ற பழமொழி கூறப்பட்டதே அதற்குதான். எனவேதான், எங்கள் மகனை பள்ளியில் சேர்க்கும் போது பிரம்பை வாங்கி தலைமை ஆசிரியரிடம் கொடுத்துள்ளோம்" என்றனர்.