இந்துத்துவா எதிர்ப்பு- மதுரையில் செஞ்சட்டை பேரணி- திராவிட, இடதுசாரி, அம்பேத்கரிஸ்டுகள் பங்கேற்பு
மதுரை: இந்துத்துவா கொள்கைகளுக்கு எதிராக மதுரையில் இன்று செஞ்சட்டை பேரணி நடைபெற்றது. பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு சார்பாக நடைபெற உள்ள இந்த பேரணியில் திராவிட இயக்கம், இடதுசாரி இயக்கத்தினர் மற்றும் அம்பேத்கரிஸ்டுகள் பெருந்திரளாக பங்கேற்றனர்.

இந்துத்துவா கொள்கைகளை எதிர்ப்பவர்கள் ஓரணியில் ஒன்று திரண்டு கருஞ்சட்டைப் பேரணி, நீலச்சட்டைப் பேரணி ஆகியவை திருச்சி, கோவையில் ஏற்கனவே நடத்தப்பட்டிருந்தது. இதில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு திரும்பிப் பார்க்க வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து இன்று மதுரையில் செஞ்சட்டைப் பேரணிக்கு பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. முன்னதாக மதுரையில் திராவிடர் விடுதலை கழகத்தின் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தந்தை பெரியார் திக பொதுச்செயலாளர் கோவை ராமகிருட்டிணன், மதுரை எம்.பி. வெங்கடேசன் ஆகியோர் நேற்று செய்தியாளர்களை சந்தித்தனர். அச்சந்திப்பின் போது, வருணாஸ்ரம வாதிகளுக்கு எதிராக, மனுவாதிகளுக்கு எதிராக, இந்தியாவை மக்களுக்கான இந்தியாவாக, சமத்துவத்திற்கான இந்தியாவாக, சமூக நீதிக்கான இந்தியாவாக மாற்ற பேரணி நடைபெற உள்ளது என்றார் சு.வெங்கடேசன் எம்.பி.

இதனையடுத்து மதுரை செஞ்சட்டைப் பேரணியில் பங்கேற்பதற்காக தமிழகம் முழுவதும் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் இன்று திரண்டிருந்தனர். இந்துத்துவா எதிர்ப்பு முழக்கங்களுடன் இப்பேரணி நடைபெற்றது. இப் பேரணியில் இடதுசாரி தலைவர்கள் நல்லகண்ணு, கே.பாலகிருஷ்ணன், முத்தரசன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் பல்வேறு இயக்க தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் பங்கேற்றனர்.












Click it and Unblock the Notifications