''செந்தில்பாலாஜிக்கு மதுவிலக்கை பற்றி தெரியல! திமுக ஆட்சியில் எங்கும் மது எதிலும் மது''! -அன்புமணி
மதுரை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு மதுவிலக்கு என்றால் என்னவென்றே தெரியவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் விமர்சித்துள்ளார்.
பொதுவாக எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்ற முழக்கத்தை முன் வைத்து தான் திமுக ஆட்சிக்கு வந்தது என்றும் ஆனால் அந்த திமுக ஆட்சியிலேயே இன்று எங்கும் மது எதிலும் மது என்ற நிலை உள்ளதாக தெரிவித்தார்.
மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இதனைக் கூறினார்.

மதுவிலக்கு விவகாரத்தில் திமுக நிறுவனர் அண்ணாவின் கொள்கையை முதல்வர் ஸ்டாலின் ஏன் பின்பற்றவில்லை என்ற கேள்வியை எழுப்பிய அன்புமணி, 5 ஆண்டுகளுக்கு முன்னர் பூரண மதுவிலக்கு கொண்டு வருவோம் எனக் கூறிவிட்டு இப்போது ஏன் இப்படி மாறினீர்கள் என வினவினார்.
மது விற்பனையை உயர்த்துவது தான் தமிழ்நாட்டின் வளர்ச்சியா எனக் கேள்வி எழுப்பிய அன்புமணி ராமதாஸ், தன்னை பொறுத்தவரை இது ஒரு சாபக்கேடு என்றும் தமிழ்நாட்டிற்கு வெட்கக்கேடு என்றும் விமர்சித்தார்.
மது விற்பனையை உயர்த்தியிருப்பதன் மூலம் தமிழகத்தின் வீழ்ச்சி தொடங்கிவிட்டதாகவும் தமிழ்நாட்டின் மிகப்பெரிய பாராக சேப்பாக்கம் மைதானம் மாறிவிட்டது எனக் குற்றஞ்சாட்டினார்.
தமிழக அரசு கொடுத்த அனுமதியால் 45,000 பேர் ஒரே இடத்தில் கூடி குடிக்கப் போகிறார்கள் என்றும் குடிக்காமல் கிரிக்கெட் பார்க்க முடியாதா எனவும் வினவினார்.
பன்னாட்டு மாநாடுகள், விளையாட்டுப் போட்டிகளில் மதுவுக்கு அனுமதி கொடுத்திருப்பதை துளியும் ஏற்க முடியாது என்றும் ஒன்றிரண்டு நிறுவனங்களுக்காக அரசு சாதகமாக செயல்படுகிறது எனவும் அன்புமணி விமர்சித்தார்.
மது விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தனிக்கவனம் செலுத்த வேண்டும் என்றும் மக்கள் கோபத்துடன் இருக்கிறார்கள் எனவும் அன்புமணி அலர்ட் செய்தார்.












Click it and Unblock the Notifications