அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீச்சு.. பாஜகவைச் சேர்ந்த 5 பேர் கைது!
மதுரை: தமிழக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பாஜகவைச் சேர்ந்த 5 பேரை காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரின் ராஜோரி மாவட்டத்திலிருந்து சுமார் 25 கி.மீ தொலைவில் அமைந்திருந்த ராணுவ முகாமில் கடந்த 11ம் தேதி அதிகாலையில் பயங்கரவாதிகளால் தற்கொலைப்படை தாக்குதல் நடைபெற்றது. இதில் இந்திய ராணுவத்தைச் சேர்ந்த 3 வீரர்கள் வீர மரணமடைந்தனர். அதில் மதுரை மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த லட்சுமணனும் உயிரிழந்தார்.

நிவாரண உதவி
நாட்டின் 75வது சுதந்திர தினம் கொண்டாடப்பட உள்ள நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும்பெரும் கவலையை ஏற்படுத்தியது. இதனையடுத்து, உயிரிழந்த லட்சுமணின் குடும்பத்தாருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்தார். அதுமட்டுமல்லாமல் லட்சுமணின் குடும்பத்தினருக்கு ரூ.20 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவித்தார்.

மதுரை விமான நிலையம்
இதனையடுத்து இன்று நண்பகல் அவரது உடல் மதுரைக்கு விமான நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டது. விமான நிலைய இயக்குநர் அலுவலகம் முன்பு வைக்கப்பட்டுள்ள வீரரின் உடலுக்கு தமிழ்நாடு அரசு சார்பில் நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

திமுக - பாஜக மோதல்
இதனிடையே அஞ்சலி செலுத்துவதில் திமுக - பாஜக இடையே மோதல் ஏற்பட்டது. விமான நிலையம் வந்த ராணுவ வீரரின் உடலுக்கு, அரசின் சார்பாக அஞ்சலி செலுத்திய பின்னரே, பாஜகவினர் அஞ்சலி செலுத்த வேண்டும் என்று கூறியதால் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து அங்கிருந்து புறப்பட்ட தமிழக நிதி மற்றும் மனிதவள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது பிஜேபியை சேர்ந்த பெண் உறுப்பினர் ஒருவர் செருப்பை எரிந்தார்.

5 பேர் கைது
இந்த விவகாரத்தில் தொடர்புடைய பாஜகவினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்த நிலையில் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கார் மீது செருப்பு வீசிய பாஜகவைச் சேர்ந்த 5 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அதில் மதுரை பாஜக மாவட்ட துணைத் தலைவர் மார்க்கெட் குமார், பாலா, திருச்சியை சேர்ந்த ஜெயகிருஷ்ணா, கோபிநாத் மற்றொரு கோபிநாத் என 5 பேர் மீது போலீசார் 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications