சுந்தர் சி-யை விடுங்க! 28 கிலோவிலிருந்து 39 கிலோவுக்கு எடை கூடிய விஸ்வா! பிடிஆர் சொன்ன சுவாரஸ்யம்
மதுரை: தமிழ்நாடு முதல்வரின் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தால் பயனடைந்த மாணவன் குறித்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் சுவாரஸ்மான தகவலை சொன்னார்.
நேற்று மதுரை சுப்பிரமணியபுரம் தேர்தல் பரப்புரையில், மதுரை மத்திய தொகுதி திமுக வேட்பாளர் பழனிவேல் தியாகராஜனை மாணவன் விஸ்வா சந்தித்தார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தால் பயனடைந்ததற்கும், தனது உடல்நலனில் அமைச்சர் காட்டிய தனிப்பட்ட அக்கறைக்கும் விஸ்வா நன்றி தெரிவித்து வாழ்த்தினார். நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியனும் உடனிருந்தார்.
முத்துப்பட்டி அரசு கள்ளர் மேல்நிலைப் பள்ளி மாணவன் விஸ்வா, இத்திட்ட பலன்களைப் பெற்று, அமைச்சரின் தனிப்பட்ட கவனத்தால் முழு ஆரோக்கியத்துடன் திகழ்கிறார்.
காலை உணவுத் திட்டம் தான் நிதி அமைச்சராக இருந்தபோது உருவானது என்றும், தனது தொகுதியிலேயே அதை முதலமைச்சர் துவக்கியது பெரும் பெருமையென்றும் பழனிவேல் தியாகராஜன் குறிப்பிட்டார். முதல்முறையாக இத்திட்டம் தனது தொகுதியின் அனைத்து பள்ளிகளுக்கும் ஆரம்பிக்கப்பட்டதாக அவர் கூறினார்.
மெலிந்திருந்த விஸ்வாவை முதலில் கண்டபோது அமைச்சர் அவரிடம் விசாரித்தார். "இல்ல கொஞ்ச நாளைக்கு முன்னால எனக்கு மஞ்சக்காமலை வந்துச்சு" என விஸ்வா பதிலளித்தார். கொரோனா காலத்தில் பல குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து குறைபாடு ஏற்பட்டதால், விஸ்வாவின் அனுபவம் ஓர் உந்துதலாக அமைந்தது.
இதனையடுத்து, அனைத்து பள்ளிகளிலும் மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு, ஊட்டச்சத்து நிலைகள் ஆய்வு செய்யப்பட்டு மேம்படுத்தப்பட்டன.
விஸ்வா ஒரு தனிப்பட்ட வழக்காகவே இருந்தார்; தொடர் முயற்சிகள் இருந்தும் அவரது எடை உயரவில்லை. மூன்று மாதங்களாக எடை, உயரத்தில் மாற்றம் இல்லாததால், ஒழுங்காக சாப்பிட்டு வளர்ச்சி அடைந்தால் சைக்கிள் பரிசளிக்கப்படும் என ஊக்கம் அளிக்கப்பட்டது.
இந்த ஒரு ஆண்டு காலத்திற்கு, கழகத் தோழர்கள் மூலம் தினமும் பழம், பிஸ்கட், வைட்டமின் மாத்திரைகள் அனுப்பப்பட்டு, வாராந்திர எடை அளவீடுகளுக்கு எடை ஸ்கேலும் வழங்கப்பட்டது.
சுமார் ஓராண்டு தொடர் பராமரிப்புக்குப் பிறகு, விஸ்வாவின் உடல்நலத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டது. அமைச்சர் அவரிடம் வளர்ச்சி குறித்து விசாரித்தார்.
அமைச்சர்: "ஒரு ஆண்டு கழிச்சு எத்தனை கிலோக்கு வந்த நீ? என்ன வெயிட்டுக்கு வந்த? எத்தனை கிலோ எடைக்கு வந்த?" மாணவன்: "39 கிலோக்கு வந்துள்ளேன. ஆரம்பத்துல 28 கிலோ தான் இருந்தேன்." அமைச்சர்: "அதற்கு பிறகு என்ன வாங்கி கொடுத்தேன்?" மாணவன்: "சைக்கிள்."
விஸ்வாவின் இப்போதைய வளர்ச்சியைக் கண்டு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மிகுந்த மகிழ்ச்சியடைந்தார். ஊட்டச்சத்து குறைபாட்டைத் திருத்துவது நீண்டகால செயல்முறை என்பதற்கு விஸ்வாவின் நிலை சிறந்த சான்று என அவர் விளக்கினார்.
அமைச்சர் மேலும் கூறியதாவது: "ஒரு தவறான விளைவு இல்ல, குறைவான ஒரு விளைவு. ஒரு இடத்தில் கண்டறிந்தால் அதை திருத்துவது அஞ்சு நிமிஷத்திலயோ 10 நிமிஷத்திலயோ ஒரு மாசத்தலயோ விஸ்வாவோட கேஸ்ல கிட்டத்தட்ட ஒரு வருஷம் கழிச்சுதான் வளர ஆரம்பிச்சான். ஒழுங்கான வெயிட் வந்தான்."
அமைச்சர் தனது மகிழ்ச்சியைத் தொடர்ந்தார். "எனக்கு இருக்கறதுலயே பெரிய மகிழ்ச்சி இன்னைக்கு பாருங்க விஸ்வா நீ உயரமா நான் உயரமாடா யாரு உயரம் ஜாஸ்தி? சரி அடுத்த தடவை நான் பாக்குறதுக்குள்ள இவன் பத்தாம் கிளாஸ் 11ஆம் கிளாஸ் போறதுக்கு உள்ள உறுதியா இவன் என்னோட உயரமா இருப்பான். இவ்வாறு தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications