Railway Exams in Tamil: ரயில்வே தேர்வில் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகள் எங்கே? சு.வெங்கடேசன் கேள்வி
மதுரை: தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வுத் தேர்வில் மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டும் என்பது விதி. ஆனால் தமிழ் கேள்வித்தாள் இல்லாமல் தேர்வு நடைபெற்றுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை எம்பி சு.வெங்கடேசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இந்த தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியுள்ள அவர், தமிழ் கேள்விதாளுடன் மீண்டும் மறு தேர்வை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக தனது x பக்கத்தில் அவர் பதிவிட்டிருப்பதாவது, "தமிழை புறக்கணித்து இந்தி விசுவாசத்தை காட்டுவதில் ரயில்வேக்கு ஏனிந்த ஆனந்தம்? ஒன்றிய அரசின் துறைகளுக்கு இதுவே வேலையாகி விட்டது. இந்தி மீதான விசுவாசத்தை அவ்வப்போது வெளிப்படுத்துவதில் அவர்களுக்கு ஆனந்தம்.
ஆகஸ்ட் 10, 2025 நடத்தப்பட்ட தென்னக ரயில்வே இளநிலைப் பொறியாளர் பதவி உயர்வு காலியிடத் தேர்வில் கேள்வித் தாள் இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமே தரப்பட்டுள்ளது. மாநில மொழி உள்ளிட்டு மூன்று மொழிகளில் கேள்வித்தாள் தரப்பட வேண்டுமென்ற நடைமுறை அப்பட்டமாக மீறப்பட்டுள்ளது.
இது மொழி உரிமை மீதான தாக்குதல் ஆகும். ஒன்றிய அரசுத் துறையின் தொடர்ந்த ஓரவஞ்சனையின் வெளிப்பாடே. ஆகவே மேற்கண்ட தேர்வை ரத்து செய்து மறு தேர்வு தமிழ் கேள்வித்தாள் உள்ளிட்டு தரப்பட்டு நடத்தப்பட வேண்டுமென்று ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், தென்னக ரயில்வே பொது மேலாளருக்கும் கடிதம் எழுதி உள்ளேன்" என்று தெரிவித்திருக்கிறார்.
தனது ட்வீட்டுடன் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் (RRB) நடத்தும் தேர்வுகளுக்கான நடைமுறைகளையும் இணைத்திருக்கிறார். அதில், எழுத்துத் தேர்வுக்கான நடைமுறைகள் என்கிற தொகுதியில்,
கேள்வித்தாள்கள் தமிழ், ஆங்கிலம், இந்தி, அசாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், கொங்கணி, மலையாளம், மணிப்புரி, மராத்தி, ஒரியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது என 15 பிராந்திய மொழிகளில் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் தவறான பதில்களுக்கு மதிப்பெண்கள் குறைக்கப்படும் (negative marking) என்ற விதிமுறை இல்லை. இதனால், எந்தவொரு கேள்விக்கும் தவறான பதிலளித்தால், அதற்கான மதிப்பெண்கள் கழிக்கப்படாது. பல்வேறு மண்டலங்களில் தேர்வுகளுக்குத் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களைக் கொண்டு, தேர்வின் செயல்முறைகள் நடைபெறும். எழுத்துத் தேர்வுகள் கணினி மூலம் நடத்தப்படும்.
தேர்வின்போது எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பயன்படுத்தவோ, கொண்டுவரவோ கூடாது. இந்த விதியை மீறுபவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது.












Click it and Unblock the Notifications