மேக மூட்டம்..சாரல் மழை..லேசான குளிர்.. 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் மழையாம்..ரெயின் கோட் அவசியம்
மதுரை: வளி மண்டல கீழடுக்குச் சுழற்சியினால் தமிழகம், புதுச்சேரியில் இன்றும் நாளையும் இடி மின்னலுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வடகிழக்குப் பருவமழை 29 ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. பல மாவட்டங்களில் காலை நேரத்திலேயே சாரல் மழை பெய்து வருகிறது.
தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளிலிருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி இருக்கிறது.
கார்த்திகை மாதம் வரை அடை மழை பெய்யும் நிலையில் பல பகுதிகளிலும் மூடுபனி சூழ்ந்துள்ளது. மாலை நேரத்திலும் அதிகாலை நேரத்திலும் குளிர் தாக்குவது இயல்புக்கு மாறாக உள்ளது. காலை முதலே மதுரை புறநகர் பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் மழைக்கான அறிகுறியுடன் உள்ளது. தூத்துக்குடியில் கொட்டித்தீர்த்த கனமழையால் வெள்ளம் சூழ்ந்துள்ளது.
இரவு முதல் நசநசத்த மழை.. தூத்துக்குடியில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
வடகிழக்கு பருவமழை
வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகத்தின் வட மாவட்டங்களில் அதிக மழை கிடைக்கும். இந்த ஆண்டு தென் மேற்குப் பருவமழை காலத்திலேயே அபரிமிதமாக மழை பெய்துள்ளது. இந்த நிலையில் வடகிழக்குப் பருவமழை 29ஆம் தேதி தொடங்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று முதல் 30ஆம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
29ஆம் தேதி கனமழை
வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் வரும் 29 ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், சிவகங்கை, விருதுநகர், மதுரை, தேனி, தென்காசி, திண்டுக்கல், இராமநாதபுரம், தூத்துக்குடி, மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
கொட்டப்போகும் மிக கனமழை
30ஆம் தேதி தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடிமின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும் பெய்ய வாய்ப்பு உள்ளது.
எங்கெங்கு மழை
செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், புதுக்கோட்டை, சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், தென்காசி, மதுரை, தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை
29,30ஆம் தேதிகளில் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா பகுதிகள் மற்றும் இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்படுகிறார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.