அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. தங்க மோதிரம் வென்ற விஜயபாஸ்கரின் காளை.. 2வது சுற்றில் வென்றவர்கள் யார்?
மதுரை: அலங்காநல்லூரில் நடைபெற்று வரும் ஜல்லிக்கட்டு போட்டியில் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளை தங்க மோதிரத்தை வென்று அசத்தியுள்ளது. அதேபோல் நடிகர் சூரியின் கருப்பன் காளையும் பரிசை வென்று அசத்தி உள்ளது.
அவனியாபுரம், பாலமேடு ஆகியவற்றைத் தொடர்ந்து உலகப்புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வருகின்றன. காலை 7 மணியளவில் அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு போட்டிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். அவருடன் மகன் இன்பநிதியும் பங்கேற்றது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அதேபோல் அமைச்சர் மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உள்ளிட்டோரும் பங்கேற்றுள்ளனர். தொடர்ந்து முதல் சுற்றுப் போட்டிகள் தொடங்கிய நிலையில், காளைகள் ஒரு பக்கம் சீறிப் பாய்ந்தன. இன்னொரு பக்கம் மாடுபிடி வீரர்களும் காளைகளை அடக்கி வெல்வதற்கு ஆர்வம் காட்டினர். முதல் சுற்று முடிவில் சூர்யா 3 காளைகளை அடக்கி முதலிடத்தை பிடித்தார்.
தினேஷ், கண்ணன் மற்றும் கெளதம் ஆகியோர் தலா 2 காளைகளை அடக்கி 2வது இடத்தையும் பிடித்தனர். நடிகர் சூரியின் காளையான கருப்பண் யாராலும் அடக்கப்படவில்லை. அதேபோல் அதிமுக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கரின் கொம்பன் காளையும் வாடிவாசலில் சிறப்பான வேடிக்கையை காட்டி தங்க மோதிரத்தை வென்று அசத்தியது.
இதனையடுத்து தொடங்கிய 2வது சுற்றில் அபி சித்தர் 9 காளைகளையும், விஜய் 6 காளைகளையும், விக்னேஷ் மற்றும் அருன் குமார் தலா 4 காளைகளையும் அடக்கினர். இதனிடையே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 3வது இடத்தை பிடித்த மாடுபிடி வீரரான கார்த்தி என்பவரை மாவட்ட ஆட்சியர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் இருந்து வெளியேற்ற உத்தரவிட்டார்.
ஏனென்றால் 3 ஜல்லிக்கட்டு போட்டிகளில் ஏதாவது ஒரு ஜல்லிக்கட்டு போட்டியில் மட்டுமே மாடுபிடி வீரர்கள் களமிறங்க அனுமதிக்கப்படுவார்கள். இதனால் மாடுபிடி வீரரான கார்த்தி வெளியேற்றப்பட்டிருக்கிறார். தற்போது 3வது சுற்றுப் போட்டிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், மாடுபிடி வீரர்களுக்கும், காளைகளுக்கும் பரிசுகள் வாரி வழங்கப்பட்டு வருகின்றன.












Click it and Unblock the Notifications