மதுரை அருகே என்கவுண்டரில் ரௌடி சுபாஷ் சுட்டுக் கொலை! சேஸிங் செய்த போலீசாரை தாக்கியதால் பயங்கரம்!
மதுரை: மதுரை அருகே போலீஸ் என்கவுண்ட்டரில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். ரவுடி சுபாஷ் சந்திரபோஸ், துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீசார் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.
மதுரையில் கிளாமர் காளி என்ற காளீஸ்வரன் கொலை வழக்கில் தொடர்புடைய நேதாஜி சுபாஸ் சந்திரபோஸ் என்பவர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மார்ச் 22 ஆம் தேதி மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தனக்கன்குளம் மொட்டமலை பகுதியில் ரவுடி காளீஸ்வரன் 4 பேர் கொண்ட மர்ம நபர்களால் சரமாரியாக வெட்டிக் கொல்லப்பட்டார். தமது வீட்டிற்கு வெளியே வந்த காளீஸ்வரனை 2 பைக்குகளில் வந்த மர்ம நபர்கள் சரமாரியாக வெட்டினர். இதில் காளீஸ்வரன் துடிதுடித்து உயிரிழந்தார்.
முன்விரோதம் காரணமாக காளீஸ்வரன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது. ரவுடி காளீஸ்வரன் கொலை வழக்கை விசாரிக்க 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, குற்றவாளிகள் தேடப்பட்டு வந்தனர். ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் இந்த கொலையில் சம்பந்தப்பட்டிருக்கலாம் என போலீஸ் விசாரணையில் கண்டறிந்தனர்.
இந்நிலையில் ரவுடி காளீஸ்வரன் கொலையில் தேடப்பட்டு வந்த ரௌடி சுபாஷ் சந்திரபோஸ் என்கவுன்ட்டர் செய்யப்பட்டுள்ளார். மதுரை வேலம்மாள் கல்லூரி அருகே ஆயுதங்களுடன் காட்டில் பதுங்கி இருந்தவரை பிடிக்கச் சென்ற போது, சுபாஷ் தன்னை துரத்திப் பிடிக்க முயன்ற போலீசார் மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அப்போது தற்காப்புக்காக போலீஸ் இன்ஸ்பெக்டர் பூமிநாதன் சுட்டதில் ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் உயிரிழந்துள்ளார்.












Click it and Unblock the Notifications