திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றம்!
மதுரை: திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. சிக்கந்தர் பள்ளிவாசலில் சந்தனக்கூடு கொடியேற்றத்தில் மத நல்லிணக்கத்தைப் போற்றும் வகையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் வழக்கம் போல் மங்கள இசை வாசித்தனர்.
மதுரை அருகே திருப்பரங்குன்றம் மலை மேல் உள்ள சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மசூதியில், ஆண்டுதோறும் சந்தனக்கூடு விழா சிறப்பாக நடைபெறும். இந்தாண்டு சந்தனக்கூடு விழா நடத்துவது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தை, திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடந்தது. திருப்பரங்குன்றம் சுல்தான் சிக்கந்தர் பாதுஷா மசூதியில் நடைபெறும் சந்தனக்கூடு விழாவிற்கு, வழக்கம்போல் மலைமேல் உள்ள மரத்தில் கொடியேற்றலாம் என திருமங்கலம் ஆர்டிஓ அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் பாதுஷா மசூதி நிர்வாகம் சார்பில் 2026 ஆம் ஆண்டுக்கான சந்தனகூடு திருவிழாவிற்காக, 21ம் தேதி திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள மரத்தில் வழக்கம்போல் கொடியேற்றலாம். சந்தனக்கூடு விழா நடத்தும் நிர்வாகிகள், 2024 மற்றும் 2025ம் ஆண்டுகளில் பிறப்பிக்கப்பட்ட நிபந்தனைகளை நடப்பு ஆண்டிலும் கடைப்பிடிக்க வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டது.
மேலும், கொடியேற்றம் மற்றும் சந்தனக்கூடு திருவிழா நாட்களில் வழக்கமான வீதிகளில் ஊர்வலம் செல்லும்போது, சட்டம் ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் செயல்பட வேண்டும், கொடியேற்றம், சந்தனக்கூடு நிகழ்வில் புதிய நடைமுறைகளை ஏற்படுத்துவதோ, பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் பட்டாசு வெடிப்பதோ கூடாது. கொடியேற்றம் நடைபெறும் நாளில் விதிமீறலால் பிரச்சனைகளுக்கு தர்கா நிர்வாகம் பொறுப்பேற்க வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றுவது தொடர்பாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்து வந்த நிலையில் உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றம் வரை வழக்குகள் நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இன்று சந்தனக்கூடு விழாவிற்காக மலை மேல் உள்ள தர்காவின் அருகில் உள்ள கல்லத்தி மரத்தில் தர்கா சார்பில் கொடி ஏற்றப்பட்டுள்ளது. முன்னதாக, சந்தனக்கூடு கொடியேற்றத்திற்கு இந்துத்வ அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதற்கிடையே, திருப்பரங்குன்றம் மலை மீது அமைந்துள்ள சிக்கந்தர் பாதுஷா பள்ளிவாசலில் சந்தனக்கூடு திருவிழா கொடியேற்றப்பட்டது. சிக்கந்தர் பள்ளிவாசலில் சந்தனக்கூடு கொடியேற்றத்தில் மத நல்லிணக்கக்கத்தைப் போற்றும் வகையில் இந்து சமூகத்தைச் சேர்ந்த நாதஸ்வர மற்றும் தவில் கலைஞர்கள் வழக்கம் போல் மங்கள இசை வாசித்தனர்.
சிக்கந்தர் பள்ளிவாசல் சார்பாக மலை மேல் உள்ள தர்கா அருகே உள்ள கள்ளத்தி மரத்தில் சந்தனக்கூடு கொடிமரம் ஏற்றப்பட்ட நிலையில், நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications