அதிமுகவில் இனி சர்பிரைஸ்தான்! எனது மூவ் தனியாக இருக்கும்! சசிகலா சஸ்பென்ஸ்!
மதுரை: இன்று நீங்கள் பசும்பொன்னில் பார்த்ததை விட அதிமுகவில் நிறைய சர்பிரைஸ் நடக்கும், வெயிட் அன்ட் சீ என முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலா பரபரப்பு தகவலை அளித்துள்ளார்.
முத்துராமலிங்கத் தேவர் ஜெயந்தி விழா, குரு பூஜை விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் முதல்வர் ஸ்டாலின், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சசிகலா, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ஓபிஎஸ் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தேவரின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இந்த நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகிய மூவரும் இன்று திடீரென ஒன்றாக வந்து மரியாதை செலுத்தினர். ஒரே நேரத்தில் மாலை அணிவித்தனர். ஒரே நேரத்தில் மலரஞ்சலி செலுத்தினர்.
அது போல் கூட்டாக செய்தியாளர்களையும் சந்தித்தனர். அப்போது டிடிவி தினகரன் கூறுகையில், "சசிகலா இங்கு வருவதற்காக கொஞ்சம் காலதாமதமாக கிளம்பினார். அதனால் அவரால் எங்களோடு இங்கு பங்கேற்க முடியவில்லை.
ஆனால் அவர் மனதார என்றைக்கும் எங்களோடு இருப்பார் என்றார். இந்த நிலையில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு மதுரை புதூர் பகுதியில் சசிகலா செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில் அதிமுகவில் சர்பிரைஸாக அனைத்தும் நடக்கும். அதிமுகவில் நடக்கும் பிரச்சினைகள் எல்லாம் சுமூகமாக தீர்க்கப்படும். அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டு வருவேன் என்று நான் சொல்கிறேன் என்றார்.
அப்போது செய்தியாளர் குறுக்கிட்டு, எப்படி முடியும் என்றார். அதற்கு சசிகலா Wait and See என கூறி தேர்தல் மூலம் மீண்டும் அதிமுக ஆட்சி மலரும் என தெரிவித்தார். எடப்பாடி பழனிசாமி எல்லாரையும் துரோகிகள் என கூறி அவர்களால்தான் ஆட்சி அமையவில்லை என கூறினாரே என கேட்டதற்கு சசிகலா, அதிமுக ஆட்சிக்கு வரும். அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள் என்றார்.
மேலும் சசிகலா, "யார் என்ன நடவடிக்கை எடுத்தாலும் நான் எல்லோரையும் சந்திப்பேன். எத்தனை பேரை கட்சியில் இருந்து நீக்க முடியும். எம்ஜிஆரின் மறைவில் இருந்து கட்சியை பார்த்து வருகிறேன். பழைய நிலை அதிமுகவில் திரும்பும். இரண்டாவது முறை ஏற்பட்டுள்ள இந்த பிரச்சினையை நிச்சயம் சரி செய்வேன். யார் துரோகி என அதிமுகவின் அடிமட்ட தொண்டர்களிடம் போய் கேட்டால் தெரியும்.
அதிமுகவை பொருத்தவரை இது இரண்டாவது முறை நடக்கும் பிரச்சினை. மீண்டும் அதிமுக இயல்பு நிலைக்கு திரும்பும், நான் கட்சியை ஒன்றிணைக்கும் வேலையை ஏற்கெனவே தொடங்கிவிட்டேன். அரசியலில் எடுத்தோம் கவிழ்த்தோம் என செய்வது என் பழக்கம் இல்லை.
என்னை பற்றி மூத்த தலைவர்களுக்குத் தெரியும். பொறுமையாக இருங்கள். ஜெயலலிதாவை திட்டியவர்களைக் கூட நாங்கள் அமைச்சர்களாவும் அவைத் தலைவர்களாகவும் ஆக்கியுள்ளோம். என்னுடைய மூவ் தனியாகதான் இருக்கும். ஆனால் அது தனியார் தெரியும் என்றார்.












Click it and Unblock the Notifications