Sathankulam murder: காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்பட 9 பேருக்கும் தூக்கு தண்டனை எப்போது நிறைவேறும்?
மதுரை: சாத்தான்குளம் தந்தை- மகன் கொலை வழக்கில் 9 போலீஸாருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் அடுத்து என்ன நடக்கும் என்பதை பார்க்கலாம். மேலும் அவர்களது தூக்கு தண்டனை எப்போது நிறைவேறும் என்பதையும் தெரிந்து கொள்ளலாம்.
சாத்தான்குளம் தந்தை மகனை கொடூரமாக அடித்துக் கொன்ற ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகு கணேஷ், பாலகிருஷ்ணன், தலைமைக் காவலர் முருகன், காவலர்கள் சாமதுரை, முத்துராஜ், செல்லதுரை, தாமஸ் பிரான்சிஸ் மற்றும் வெயில்முத்து ஆகியோருக்கு நேற்றைய தினம் தண்டனை அறிவிக்கப்பட்டது.

அவர்கள் 9 பேருக்கும் இரட்டை தூக்கு தண்டனையை நீதிபதி முத்துக்குமரன் வழங்கினார். அதாவது தனித்தனியே தண்டனை என்ற பெயரில் இரட்டை மரண தண்டனை விதிக்கப்பட்டது. மேலும் அவர்களிடம் தனித்தனியே அபராதம் விதிக்கப்பட்டது.
இந்த தீர்ப்பை ஜெயராஜ், பெனிக்ஸ் குடும்பத்தினர் மட்டுமல்லாது பலரும் வரவேற்றுள்ளனர். அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு இது ஒரு பாடமாக அமையும் என தெரிவிக்கிறார்கள்.
இந்த நிலையில் இந்த வழக்கில் 9 பேருக்கும் எப்போது தூக்கு தண்டனை விதிக்கப்படும் என்பதை தெரிந்து கொள்ளலாம். சாத்தான்குளம் சம்பவத்தில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டதும் அந்த 9 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.
9 பேருக்கும் இதுவரை காவல் துறை சார்பில் வழங்கப்பட்டு வரும் பிழைப்பூதியம் நிறுத்தப்படும். இவர்கள் 9 போலீஸாரும் இனி கடும் குற்ற வழக்கின் கைதிகளாகவே கருதப்படுவர். 9 பேரும் தங்களது தண்டனையை குறைக்க கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய வாய்ப்புள்ளது.
9 பேரும் தங்களுக்கு விதிக்கப்பட்ட அபராதத் தொகையை நிறுத்தி வைக்க கோரலாம். சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டின் போதும் தண்டனை உறுதி செய்யப்பட்டால் அவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடலாம்.
தமிழக ஆளுநரிடம் கருணை மனு அளிக்க வாய்ப்பு வழங்கப்படும். ஆளுநர் கருணை மனுவை நிராகரித்தால் குடியரசுத் தலைவருக்கு கருணை மனு அளிக்கலாம். குடியரசுத் தலைவரும் இவர்களது கருணை மனுவை நிராகரித்தால் சீராய்வு மனுவை 9 பேரும் தாக்கல் செய்ய வாய்ப்புள்ளது.
அந்த சீராய்வு மனுவும் தள்ளுபடியானால் அதன் பின்னர் தூக்கு தண்டனை நிறைவேற்றும் நிலை வரும் என தெரிகிறது. 600 பக்கங்கள் கொண்ட இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி வாசித்தபோது, "இது சாதாரண குற்றமல்ல. நிராயுதபாணியாக இருந்தும் இருவரையும் இரவு முழுவதும் காவல் நிலையத்தில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளனர்.
அரிதினும் அரிதான வழக்கு. மரண தண்டனை கொடுப்பதா என ஆலோசனை செய்ய வேண்டியுள்ளது. ஆயுள் தண்டனை காவல் துறைக்கு ஒரு அச்சத்தை ஏற்படாது. தந்தை, மகன் ஆகியோரை நிர்வாணப்படுத்தி கடும் தாக்குதல் நடத்தியுள்ளனர். பழிவாங்கும் நோக்கத்துடன் இந்த சம்பவம் நடந்துள்ளது. தந்தை மகனுக்கு செய்த கொடூரங்களை படிப்பதற்கே பதைபதைக்கிறது என்றார்.
கொரோனா ஊரடங்கின் போது கடையை திறந்து வைத்ததற்காக தந்தை, மகனை காவல் நிலையத்திற்கு விசாரணை என்று அழைத்து சென்று அவர்களை கடுமையாக தாக்கி, உடலில் ரத்தம் வரும் அளவுக்கு அடித்து துன்புறுத்தியே கொலை செய்துள்ளனர். இந்த வழக்கில்தான் 6 ஆண்டுகள் கழித்து தற்போது தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications