வாக்கிங் போனா இடைத்தேர்தல் வந்துடுமோனு பயமா இருக்கு! எப்படிப்பட்ட ஆட்சி பாருங்க..செல்லூர் ராஜு கலகல
மதுரை: மதுரையில் நடைப்பயிற்சி செய்வதற்கே பயமாக உள்ளது.. நடைபயற்சிக்கு சென்றாலே இடைத்தேர்தல் வந்துவிடுமோ அப்டின்னு பயமா இருக்கு.. எப்படிப்பட்ட ஆட்சி நடக்குது பாருங்க என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு விமர்சித்துள்ளார்.
சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து மதுரை மேற்கு சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கோச்சடை பகுதியில் புதிய பேருந்து நிறுத்தத்திற்கான கட்டிட பூமி பூஜை நிகழ்ச்சி நடைபெற்றது.

ரூபாய் 8 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட உள்ள நிலையில் பூமி பூஜையில் தமிழக முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான செல்லூர் ராஜு கலந்து கொண்டு பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், திமுக ஆட்சிக்கு வந்ததில் இருந்து 3 முறை மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 40 தொகுதிகளில் வெற்றி பெற செய்த மக்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் மின் கட்டண உயர்வை பரிசாக அளித்துள்ளார். அவரே கடந்த ஆட்சிக் காலத்தில் மின் கட்டண உயர்வு என குடும்பத்தோடு கருப்புச் சட்டை போட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆனால் அவரது ஆட்சியல் மின் கட்டணம் தான் மக்களுக்கு பரிசாக அளிக்கப்பட்டுள்ளது.
வாக்களித்த மக்களுக்கு முதல்வர் கொடுக்கும் பரிசு இது தானா? நேற்று கூட மதுரையில் நாம் தமிழர் கட்சி செயலாளர் கொலை செய்யப்பட்டுள்ளார். வாக்கிங் செல்லும் போது, அமைச்சர் வீட்டருகே அவர் கொலை செய்யப்பட்டுள்ளார். மதுரையில் தொடர் கொலை நடைபெற்று வருவதால் நடைப்பயிற்சிக்கு செல்ல கூட மக்கள் அச்சப்படுகின்றனர். அரசியல்வாதிகளான எங்களுக்கும் மதுரையில் நடைப்பயிற்சி செய்வதற்கே பயமாக உள்ளது.. நடைபயற்சிக்கு சென்றாலே இடைத்தேர்தல் வந்துவிடுமோ அப்டின்னு பயமா இருக்கு.. எப்படிப்பட்ட ஆட்சி நடக்குது பாருங்க.. நீங்கல்லாம் வாக்கிங் போகாதீங்க.. அப்பறம் இடைத்தேர்தல் வந்துடும்.
அப்பறம் திராவிடல் மாடல் ஆட்சியால தான் நாங்க ஜெயிச்சோம்னு சொல்லுவாங்க. இப்படித் தான் தா.கிருஷ்ணன் வாக்கிங் செல்லும் போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார். அவர் எம்பியாக இருந்தார். ஆனால் அவரை வெட்டியது யார் என இன்னும் தெரியவில்லை. ஆட்சி மாறியவுடன் அவரது கொலை வழக்கு என்ன ஆனது என்றே தெரியவில்லை. நாளுக்கு தமிழகத்தில் ரவுடிகள் அட்டகாசம் அதிகரித்துள்ளது. போதைப் பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. எத்தனையோ தடவை போராட்டம் நடத்தியாகி விட்டது. நாடாளுமன்ற தேர்தலில் வேட்பாளர் டாக்டர் சரவணனை வானளாவ புகழ்ந்து பேசி வாக்கு கேட்டோம். ஆனால், மக்கள் சட்டமன்றத்திற்கு ஒரு பார்வை, நாடாளுமன்றத்திற்கு ஒரு பார்வை என வாக்குகளை செலுத்தியுள்ளனர்.

யானைக்கும் அடி சறுக்கும். எம்.ஜி.ஆர் ஜெயலலிதா தலைமையே தோல்வியை சந்தித்துள்ளது. நாடாளுமன்ற தேர்தல் களம் வேறு. இந்த முடிவுகள் இறுதி அல்ல. காலம் மாறும். அதிமுக மீண்டும் அரியணை ஏறும். எடப்பாடி பழனிச்சாமி எப்படி ஆட்சி செய்யப் போகிறார் என விமர்சனம் செய்யப்பட்ட நிலையில் 4.5 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்துள்ளார்.வருகின்ற சட்டமன்ற தேர்தலில் எடப்பாடியார் தமிழக மக்களின் ஏகோபித்த ஆதரவுடன் முதலமைச்சராக வருவார்; அவர் அரசியல் சானக்கியத்தனம் மிக்கவர். சசிகலா சுற்றுப்பயணம், அதிமுக பிளவுகள், ஒன்றிணைவது குறித்த கேள்விக்கு, "Wait and see", என பதிலளித்தார்.












Click it and Unblock the Notifications