வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும்... மதுரையில் அமைச்சர் செல்லூர் ராஜு பேச்சு..!
மதுரை: வைகை நதி லண்டன் தேம்ஸ் நதி போல் மாறும் என கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியுள்ளார்.
மதுரையின் வளர்ச்சிப் பணிகளுக்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அள்ளி அள்ளிக் கொடுப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
மதுரை ஜெய்ஹிந்த்புரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனைக் கூறினார்.

கவன ஈர்ப்பு
தமிழக அமைச்சர்களில் சற்று வித்தியாசமானவர் செல்லூர் ராஜூ. ஊடகங்கள் மூலம் மக்களின் கவனத்தை ஈர்ப்பதில் கில்லாடியாக திகழும் இவர் அவ்வப்போது தமது பேட்டிகளில் சர்ச்சைக்குரிய கருத்துக்களையும் கூறி வம்பில் மாட்டிக்கொள்வார். மற்ற அமைச்சர்களை காட்டிலும் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ, கருப்பணன், ராஜேந்திரபாலாஜி, உதயகுமார், உள்ளிட்டோர் தங்கள் கருத்துக்களாலேயே ஃபேமஸ் அடைந்தவர்கள்.

லண்டன் தேம்ஸ்
மதுரையை ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரத்தை போல் மாற்றிக்காட்டுவேன் என ஏற்கனவே பேசியிருந்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இப்போது வைகை நதியை லண்டன் தேம்ஸ் நதி போல் மாற்றப்படும் எனக் கூறியிருக்கிறார். வைகை நதியில் மாசுகள் கலக்காத வண்ணம் நடவடிக்கை எடுக்கப்பட்டு தேம்ஸ் நதியை போல் தூய்மைப்படுத்தப்படும் என அவர் கூறியிருக்கிறார்.

2021-ல் முடியும்
மேலும், திமுக கதை வரும் 2021-ம் ஆண்டோடு முடியும் என்றும் மீண்டும் தமிழகத்தில் அதிமுக ஆட்சி தான் அமையும் எனவும் அமைச்சர் செல்லூர் ராஜு தெரிவித்திருக்கிறார். சமூகவலைதளங்கள் மூலம் அதிமுக ஆட்சிக்கும், முதலமைச்சருக்கும் அவப்பெயர் ஏற்படுத்த திமுக திட்டம் தீட்டி வருவதாக கூறிய அவர் ஆட்சிக்கு வருவோமா, முடியாதா என்ற ஏக்கத்தில் ஸ்டாலின் உள்ளதாக தெரிவித்தார்.

அம்மாவை பார்த்து
வட மாநிலங்களை பார்த்து தமிழகம் மிரண்டிருந்த காலத்தில் தமிழகத்தை பார்த்து வட மாநிலங்களை மிரளச் செய்தவர் ஜெயலலிதா என புகழாரம் சூட்டினார். திமுக ஆட்சியில் மின்சார கம்பியில் துணிக்காயப் போடும் அளவுக்கு மின்வெட்டு பிரச்சனை இருந்ததாகவும் அதனை தீர்த்தது அதிமுக அரசு தான் எனவும் செல்லூர் ராஜூ கூறியிருக்கிறார்.












Click it and Unblock the Notifications