கலைஞர் வீட்டில் குழந்தை பிறக்கக்கூடாது என்ற செல்லூர் ராஜூ.. அந்தர் பல்டியடித்து உதயநிதிக்கு வாழ்த்து
மதுரை: உதயநிதி ஸ்டாலின் அமைச்சரானதை விமர்சிக்கும் வகையில் கடந்த சில நாட்களுக்கு முன் கருணாநிதியின் குடும்பத்தில் குழந்தை பிறக்கக்கூடாது என்று மக்கள் நினைப்பதாக விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு, நேற்று இளைஞரான உதயநிதிக்கு விளையாட்டுத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டு இருப்பது பாராட்டிற்கு உரியது என்று தெரிவித்து இருக்கிறார்.
உலகளவில் நடைபெற உள்ள ஜூனியர் கபடிப் போட்டிக்கான வீரர்களை தேர்வு செய்வதற்கான போட்டி மதுரை அமெரிக்கன் கல்லூரியில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற போட்டிகளை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தொடங்கி வைத்தார்.
அப்போது செய்தியாளரை சந்தித்த அவர், "மதுரையில் இந்த கபடி போட்டி நடைபெறுவது பெரும் மகிழ்ச்சி. அகில இந்திய அளவில் பல மாநிலங்களில் இருந்து வீரர்கள், வீராங்கனைகள் 252 பேர் கலந்து கொண்டு உள்ளனர்.
எதிர்க்கட்சி துணை தலைவர் அதிமுகவில் யார்? உதயநிதிக்கு இடம் எங்கே தெரியுமா? சபாநாயகர் அப்பாவு பதில்!
செல்லூர் ராஜு பேட்டி
இதில் தேர்வு செய்யப்படும் நபர்கள் பிப்ரவரி மாதம் 23-ம் தேதி ஈரானில் நடைபெறும் உலக கபடி போட்டியில் விளையாட உள்ளார்கள். இந்தியா சார்பில் 30 பேர் தேர்வு செய்யப்பட்டு, 12 நபர்கள் விளையாட செல்வார்கள். இதில் தமிழர் ஒருவரும் விளையாட தேர்வு செய்யப்பட்டு உள்ளார். மதுரையில் நடைபெறும் இந்த தேர்வு போட்டிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உதவி செய்து ஒத்துழைப்பு வழங்கியுள்ளது பாராட்டுக்குறியது.
விளையாட்டுத் துறை
இந்த கபடிக் குழுவிற்கு என்னுடைய பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன். ஒவ்வொரு அரசும் விளையாட்டுக்கு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். ஜெயலலிதா அரசும், எடப்பாடி பழனிசாமி அரசும் பல்வேறு நிதிகளை விளையாட்டுத்துறைக்கு ஒதுக்கீடு செய்துள்ளது. அதே போல் இட ஒதுக்கீடுகளையும் கூடுதலாக வழங்கினர்.
உதயநிதிக்கு பாராட்டு
தற்போதைய திமுக ஆட்சியில் விளையாட்டுத்துறைக்கு இளைஞரான உதயநிதி ஸ்டாலினுக்கு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது பாராட்டிற்கு உரியது. இதனால் விளையாட்டுத் துறைக்கு நிறைய செய்வார்கள். கூடுதலான விளையாட்டு மைதாங்கள் இருக்க வேண்டும். இதற்காக சட்டமன்றத்தில் குரல் கொடுப்பேன். செய்தியின் வாயிலாக விளையாட்டுத் துறை அமைச்சர் கவனத்திற்கு நீங்கள் கொண்டு செல்லுங்கள்." என்றார்.
அன்று கொடுத்த பேட்டி
இன்று உதயநிதியை வாழ்த்திய செல்லூர் ராஜுதான் கடந்த சில நாட்களுக்கு முன்பாக திமுக மீதும் உதயநிதி அமைச்சராவதை விமர்சித்தும் பேசினார். கடந்த 19 ஆம் தேதி செய்தியாளர்களை சந்தித்த அவரிடம், "இன்பநிதிக்கு கொடி பிடிப்போம் என மூத்த அமைச்சர் கே.என்.நேரு கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார்கள்.
மன்னர் பரம்பரை
இதற்கு பதிலளித்த அவர், "நகர்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியது உண்மைதான், திமுக அமைச்சர்கள் அனைவரும் அதை ஏற்றுத்தான் ஆக வேண்டும். கருணாநிதி குடும்பத்தில் யார் அமைச்சராக இருந்தாலும் அவர் குடும்பம் தான் ஆட்சி. நாம் மன்னர் பரம்பரையை தான் ஒலித்து இருக்கிறோமே தவிர கலைஞருடைய பரம்பரையை இதுவரை ஒழிக்கவில்லை.
கருணாநிதி குடும்பத்தில் குழந்தை
கருணாநிதி குடும்பத்தில் இனி குழந்தை பிறக்கவோ, வாரிசு வரவோ கூடாது என்றுதான் எல்லாரும் மனதில் நினைப்பார்கள் என்றார். அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் எப்போதும் உண்மை பேசக் கூடியவர். எனவே இன்பநதிக்கு குழந்தை பிறந்தால் கூட அவர்களுக்கும் திமுக கொடி பிடிப்பதற்கு ஆள் இருப்பார்கள். இனிமேல் அந்த குடும்பத்தில் வாரிசு வரக்கூடாது என்று தான் நினைப்பார்கள் அப்போதுதான் அனைவரும் தலைவராக முடியும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்." என்றார்.