"மொத்தம் 60+ இடங்கள்.." ஒரே நாளில் களமிறங்கிய அதிகாரிகள்! மதுரையில் படுவேகமாக நடக்கும் மெட்ரோ பணிகள்
மதுரை: தமிழக அரசு மதுரையில் மெட்ரோ ரயிலை அமைப்பது குறித்த அறிவித்துள்ள நிலையில், இதற்கான பணிகளும் படுவேகமாக தொடங்கி நடந்து வருகிறது.
தமிழ்நாட்டில் பல ஆண்டுகளாகவே வாகன பயன்பாடு தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. சாலைகளில் வாகனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல முக்கிய நகரங்களிலும் போக்குவரத்து நெரிசல் முக்கிய பிரச்சினையாக மாறி வருகிறது.
இதைச் சமாளிக்கச் சாலை விரிவாக்கம், மேம்பாலங்கள் கட்டப்பட்டாலும் கூட இவை பெரியளவில் பயன் தருவதில்லை. இதைக் காட்டிலும் பொது போக்குவரத்தின் பயன்பாடு அதிகரித்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் குறையும் என்பது வல்லுநர்களின் கருத்து.

மெட்ரோ: அதிலும் குறிப்பாக இப்போது பெரும்பாலான மக்கள் பேருந்து, மின்சார ரயிலைக் காட்டிலும் மெட்ரோவை பயன்படுத்தவே விரும்புகின்றனர். டிராபிக் பிரச்சினை இல்லை, சொன்ன நேரத்தில் ரயில்கள் வரும், இதுபோக குளுகுளு ஏசியில் பயணம் எனப் பல காரணங்களால் மெட்ரோவில் பயணிக்கவே பொதுமக்கள் விரும்புகின்றனர். சென்னையில் ஒவ்வொரு மாதமும் மெட்ரோவை பயன்படுத்துவோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதே இதற்கு சாட்சி.
தலைநகர் சென்னையில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் மெட்ரோ பயன்பாட்டில் உள்ளது. அங்கே நீலம் மற்றும் பச்சை என்று இரண்டு வழித்தடங்களில் விம்கோ நகர் முதல் விமான நிலையம் மற்றும் பரங்கிமலை முதல் சென்னை சென்ட்ரல் வரை மொத்தம் 54.1 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ சேவை இயங்கி வருகிறது. இதற்குப் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பும் கிடைத்துள்ளது.

சென்னை: இப்போது இரண்டாம் கட்டமாக மாதவரம் - சிறுசேரி சிப்காட், பூந்தமல்லி - கலங்கரை விளக்கம், மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் சென்னை மெட்ரோ விரிவாக்க பணிகள் நடந்து வருகிறது. இது ஒரு பக்கம் இருக்கும் நிலையில், சென்னை போலவே மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயிலை அமைக்கத் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அதன்படி மதுரை மற்றும் கோவையில் மெட்ரோ அமைப்பது குறித்துக் கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிப்பு வெளியானது.
குறிப்பாக மதுரை மெட்ரோ மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. வெறும் அறிவிப்புடன் நிற்காமல் மெட்ரோவுக்கான முதற்கட்ட பணிகளைத் தமிழக அரசு விரைந்து மேற்கொண்டு வருகிறது. மதுரை மெட்ரோ விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கும் பணிகள் ஏற்கனவே படுவேகமாக நடந்து வருகிறது. அடுத்தாண்டு மதுரை மெட்ரோ கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டு 2027 இறுதியில் கட்டுமான பணிகள் நிறைவடையும் எனக் கூறப்படுகிறது.

மதுரை மெட்ரோ: 2,500 ஆண்டுகள் பழமையான வரலாற்றைக் கொண்ட மதுரை, தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருக்கிறது. இங்கே திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரை 31 கி.மீ., தொலைவுக்கு மெட்ரோ வர உள்ளது. இதில் முதல் 26 கிலோமீட்டர் மேம்பாலத்திலும் கடைசி 5 கிலோமீட்டர் சுரங்கமாக இருக்கும். மதுரை நகரின் பழமையைப் பாதுகாப்பதைக் கருத்தில் கொண்டே மெட்ரோ பணிகள் மேற்கொள்ளப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே இப்போது மதுரை மெட்ரோவில் அடுத்தகட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. மதுரையில் மெட்ரோ ரயில் கட்டுமானத்திற்காக இன்று அதிகாரிகள் வைகையாற்றில் மண் பரிசோதனை மேற்கொண்டனர். மதுரை - திருமங்கலம் இடையே 60க்கும் மேற்பட்ட இடங்களில் மண் பரிசோதனை நடந்துவருகிறது. இந்த மண் பரிசோதனையில் கிடைக்கும் முடிவுகளை வைத்து அடுத்த கட்ட முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
சோதனை: இந்த மதுரை மெட்ரோ திட்டத்திற்காக நடப்பு பட்ஜெட்டிலேயே தமிழக அரசு ₹8500 கோடியை தமிழ்நாடு அரசு ஒதுக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. சென்னை மெட்ரோவை போல இல்லாமல் மதுரையில் மெட்ரோ லைட் திட்டமே அமல்படுத்தப்படும் எனத் தெரிகிறது. இது ஒரு வகையில் மேம்படுத்தப்பட்ட டிராம் போல இருக்கும் என்று சொல்லப்படுகிறது. மதுரை மெட்ரோ ரயில்களில் தலா மூன்று பெட்டிகள் இருக்கும் எனத் தெரிகிறது. இருப்பினும், இது குறித்த உறுதியான தகவல்கள் இல்லை.












Click it and Unblock the Notifications