டெங்கு தடுப்பு.. அக்.1-ல் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்துவ முகாம்.. அமைச்சர் மா சுப்பிரமணியன் தகவல்
மதுரை: தமிழகம் முழுவதும் டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் ஆயிரம் இடங்களில் சிறப்பு முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்தார்.
டெங்கு காய்ச்சலை கட்டுப்படுத்த தமிழக அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் சில பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு ஏற்பட்டதை தொடர்ந்து தமிழ்நாடு அரசு மாவட்டம் முழுவதும் டெங்கு காய்ச்சல் தடுப்பது குறித்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மற்றும் மருத்துவமனைகளில் டெங்கு காய்ச்சலுக்கான தனி மருத்துவ பிரிவும் உருவாக்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஒரே வாரத்தில் 100 க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்தது. இதேபோல் செப்டம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தற்போது வரை 200க்கும் மேற்பட்டோருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு முழுவதும் டெங்கு பரவலை தடுக்க வரும் அக்டோபர் 1 ஆம் தேதி முதல் 1,000 இடங்களில் சிறப்பு முகாம் நடைபெறும் என்று அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் மா.சுப்பிரமணியன் கூறியதாவது:- இதுவரையில் காய்ச்சலால் மதுரையில் 17 பேர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் பருவ மழைக்கு முன் ஏற்படும் பாதிப்பு தான் இது. இதனால் பெரிய அளவில் பதற்றப்பட வேண்டிய அவசியம் ஒன்றும் இல்லை.
ஏற்கனவே இது தொடர்பாக பல்வேறு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்துள்ளது. முதல்வர் மு.க ஸ்டாலின் வழிகாட்டுதலின் படி தலைமை செயலாளர் அனைத்து துறை செயலாளர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்தினார். இதேபோல் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில், அனைத்து உயர் அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தப்பட்டு யார் யார் என்னென்ன பணிகளை செய்யவேண்டும் என்று விவாதிக்கப்பட்டுள்ளது.
டெங்கு என்று எடுத்துக்கொண்டால், தமிழகத்தில் 2012 மற்றும் 2017ம் ஆண்டுகளில் மட்டும் தான் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 2017ம் ஆண்டில் 23 ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டது. இறப்பு என்று எடுத்துக்கொண்டால், 2012 டெங்கு இறப்பு 66 என்ற எண்ணிக்கையிலும், 2017 இல் இறப்பு 65 பேர் என்ற எண்ணிக்கையிலும் இருந்தது.

எனவே இந்த மழைக்காலங்களில் வீடுகளில் தேவையின்றி தண்ணீர் தேங்கி இருப்பதை அப்புறப்படுத்த வேண்டும் என்று தொடர்ச்சியாக கூறி வருகிறோம். மருத்துவ துறையின் சார்பில் இதில், 476 மருத்துவ நடமாடும் மருத்துவ குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தலின் படி தமிழகத்தில் ஆயிரம் இடங்களில் சிறப்பு மருத்து முகாம்கள் நடத்தப்படுகிறது.
வரும் அக்டோபர் 1ம் தேதி ஞாயிற்றுக்கிழமை முதல் தமிழகத்தின் ஆயிரம் இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை சிறப்பு மருத்துவ முகாம்கள், காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும். கடந்த ஆண்டு சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டது போல நடப்பு ஆண்டிலும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications