"பாஜகவை" வெளியேற்ற.. திமுகவோடு கரம் கோர்த்த அதிமுக.. ஹிஜாப் எதிர்ப்பு.. மேலூரில் நடந்தது என்ன?
மதுரை: மதுரையில் ஹிஜாப் அணிந்த வாக்காளருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக முகவர் வெளியேற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக பல்வேறு புதிய தகவல்கள் வெளியாகி உள்ளன.
Recommended Video
கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம் தீவிரம் அடைந்து கொண்டு இருக்கிறது. அங்கு பியு கல்லூரிகள் உட்பட கல்வி நிறுவனங்களில் மாணவிகள் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்துத்துவா மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்த காரணத்தாலும், போட்டிக்கு அவர்கள் காவி துண்டு அணிந்து வந்த காரணத்தாலும் ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

வழக்கு
ஹிஜாப் தடைக்கு எதிராக இஸ்லாமிய மாணவிகள் வழக்கு தொடுத்த நிலையில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஹிஜாப் சர்ச்சை இன்று தமிழ்நாட்டிலும் எதிரொலித்தது. தமிழ்நாட்டில் இன்று நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் காலை 7 மணியில் இருந்து மக்கள் ஆர்வமாக வாக்களித்து வருகின்றனர். மக்கள் காலையில் இருந்து வரிசையில் நின்று மும்முரமாக தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகிறார்கள்.

என்ன நடந்தது
இந்த நிலையில் மதுரை மேலூர் நகராட்சி 8வது வார்டில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்ணின் ஹிஜாப்பை அகற்றும்படி பாஜக முகவர் கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு பாஜக முகவராக இருந்த கிரிராஜன், ஹிஜாப் அணிந்து வந்தால் எப்படி முகம் தெரியும். வாக்களிப்பவரின் முகத்தை பார்த்தால் தானே வாக்களிக்க அனுமதிக்க முடியும் என்று கூறினார். இதற்கு அங்கு இருந்த தேர்தல் அதிகாரி, நீங்கள் ஏன் முகத்தை பார்க்க வேண்டும்.

தேர்தல் அதிகாரி
கையில் மை வைக்கும் முன் தேர்தல் அதிகாரி முகத்தை பார்த்து சோதனை செய்துவிட்டுத்தான் மை வைப்பார். அதேபோல் அந்த பெண்மணி முழுதாக முகத்தை மூடவில்லையே. அவர் முகம் தெரியத்தானே செய்கிறது. உங்களுக்கு இப்போது என்ன பிரச்சனை என்று கேட்டார். இதையடுத்து அந்த பாஜக முகாரி கிரிராஜன், அதெல்லாம் முடியாது. அவர் ஹிஜாப் அணிந்து உள்ளே வர அக்கூடாது. வெளியே அனுப்புங்கள் என்று கோபமாக கூறினார்.

உங்கள் வேலை இல்லை
இதற்கு அந்த தேர்தல் அதிகாரி அது உங்கள் வேலை இல்லை. அந்த பெண்ணின் பெயர் வாக்காளர் பட்டியலில் உள்ளது. அவர் விதிப்படி வாக்களிக்கலாம். ஹிஜாப் அணிவதில் எந்த தவறும் இல்லை என்று கூறினார். இதை கேட்காத அந்த பாஜக பிரமுகர், கள்ள ஓட்டு போடுறாங்க, தேர்தலில் முறைகேடு நடக்குது என்று கூச்சல் போட தொடங்கினார். இதையடுத்து அங்கு இருந்த திமுக முகவர், பாஜக முகவரை வெளியேற்ற சொன்னார். தேர்தல் பணியாளர்களும் அவரை வெளியேற்ற சொன்னார்கள்.

வெளியேற்றம்
இந்த நிலையில் அங்கு இருந்த அதிமுக பிரமுகரும், பாஜக பிரமுகரை வெளியே அனுப்புங்கள். அவர் தொந்தரவுசெய்கிறார். அவர் இருந்தால் தேர்தல் சுமுகமாக நடக்காது என்று குறிப்பிட்டார். திமுக , அதிமுக பிரமுகர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து பாஜக பிரமுகரை வெளியேற்ற கூறினார்கள். இதை பாஜக பிரமுகரும் எதிர்பார்க்கவில்லை. இதையடுத்து பாஜக பிரமுகர் கிரிராஜன் வெளியேற்றப்பட்டார். புதிதாக வேறு ஒரு பாஜக பிரமுகர் அங்கு கொண்டு வரப்பட்டார்.

அதிமுக - திமுக
இதுநாள் வரை பாஜக கூட்டணியில் அதிமுக இருந்தது. ஆனால் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் இரண்டு கட்சிகளும் கூட்டணியில் இல்லை. இருப்பினும் இரண்டு கட்சிக்கும் இடையே நட்பு நிலவி வருகிறது. இப்படிப்பட்ட நிலையில்தான் ஹிஜாப் விவகாரத்தில் திமுகவுடன் சேர்ந்து பாஜக பிரமுகரை அதிமுக பிரமுகர் எதிர்த்து உள்ளார். தமிழ்நாட்டில் இது போன்ற மத ரீதியான மோதல்களுக்கு இடம் கொடுக்க கூடாது என்பதால் அதிமுக, திமுக ஒன்று சேர்ந்து அந்த பாஜக பிரமுகரை எதிர்த்து உள்ளனர்.












Click it and Unblock the Notifications