பஞ்சாயத்தை கூட்டிய பெண்மணி.. ஏமா தங்கச்சி.. என்னாச்சு.. சமாதானப்படுத்திய செல்லூர் ராஜு
மதுரை: மதுரையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்து முடித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு புறப்பட முற்படுகையில், அப்போது பெண்மணி ஒருவர் ரேசன் கடை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தார்.
அப்போது அவரை தங்கச்சி என சொல்லி செல்லூர் ராஜு சமாதானப்படுத்திய சம்பவம் கூட்டத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
செய்தியாளர் சந்திப்பின்போது திமுக அரசு குறித்து செல்லூர் ராஜு தொடர் குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.

மதுரை அச்சம்பத்து புது குளத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து கட்டப்பட்ட புதிய சமுதாயக்கூடத்தை திறந்து வைத்தார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர் திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அப்போது அவர் பேசியதாவது, "மக்களை ஏமாற்றிக்கொண்டு தன் குடும்பத்தை மட்டுமே அரசு வளர்த்து வருகிறது. மகளிருக்கு இலவச பேருந்து திட்டத்தை விடியா அரசு கொண்டு வந்தது. ஆனால் நேற்று முன்தினம் அரசின் முதன்மை செயலாளர் சுமார் 8 கோடி பேர் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெற்றுள்ளனர் எனக்கூறியுள்ளார்."
"இலவச பேருந்தில் பயணிப்பவர்களுக்கு டிக்கெட் கிடையாது. எனில் எப்படி 8 கோடி பேர் இந்த ஒன்னரை ஆண்டுகளில் பயனடைந்துள்ளார்கள் என கூறுகிறார்கள்? இந்த அறிவிப்பே தவறானது. இந்த கணக்கெடுப்பு எப்படி எடுக்கப்பட்டது என்பதே தெரியவில்லை. முதன்மை செயலாளரும் தவறான தகவலை கூறுகிறார். அதிகாரிகளும் தவறான தகவல்களை கூறுகிறார். இப்படி எல்லோருமே மக்களை ஏமாற்றுகிறார்கள். அதேபோல தேர்தல் அறிக்கையில் மாதம் மாதம் மின் கட்டணம் அளவிடப்படும் என்றும், வீட்டு வரி உயர்த்தப்படாது என்றம் அறிவித்திருந்தார்கள்."
"ஆனால், நடந்தது முற்றிலும் வேறானதாக உள்ளது. மட்டுமல்லாது திமுக அரசு தற்போது பயந்துக்கொண்டு இருக்கிறது. அமலாக்கத்துறை ரெய்டு, ஊழல் ஒழிப்புத்துறை ரெய்டு என திமுக அரசு பயந்துக்கொண்டு இருக்கிறது. நாடாளுமன்ற தேர்தலில் மத்திய அரசின் வேட்பாளருக்கு எதிராக திமுக வாக்களித்தது. ஆனால் புதிய குடியரசுத் தலைவராக முர்மு வெற்றி பெற்றவுடன் முதலில் அவர்களை சென்று சந்தித்தது திமுக எம்.பிக்கள்தான். அதேபோல ஜிஎஸ்டி வரி உயர்வு குறித்து விமர்சனம் செய்தார்கள் ஆனால், இதற்கு மத்திய நிதியமைச்சர் உரிய விளக்கம் அளித்தார்" என செல்லூர் ராஜு கூறினார்.
இதனையடுத்து கூட்டம் முடித்து அங்கிருந்து புறப்பட முற்படுகையில், அப்போது பெண்மணி ஒருவர் ரேசன் கடை குறித்து குற்றச்சாட்டை முன்வைத்தார். அப்போது அவரை தங்கச்சி என சொல்லி செல்லூர் ராஜு சமாதானப்படுத்திய சம்பவம் கூட்டத்தினரிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. ரேசன் கடைகளில் கைரேகை முறையில் பொருட்கள் விநியோகம் செய்யப்படுவது குறித்து அப்பெண்மணி விமர்சனம் செய்தார். இதனையடுத்து, கடந்த 10 ஆண்டுகளில் இந்த பிரச்னை இல்லாதிருந்த நிலையில் திமுக ஆட்சியில்தான் இது மேலெழுந்திருக்கிறது என்றும் ராஜு விமர்சித்தார்.












Click it and Unblock the Notifications